Sunday, 16 July 2017

அடையாளம்

காமராஐரின் பிறந்த நாள் நேற்று…….
எங்கு பார்த்தாலும் காமராஐரின் சாதனைகளை சொல்லி, அவரை வாழ்த்தி ஏகபட்ட பதாகைகள். அதில் காமராஐரின் புகைபடத்தோடு சோனிய காந்தி, ராகுல் காந்தி படங்களும் இன்னபிற யாரென்றே தெரியாத காங்கிரஸார்கள், நன்கொடை கொடுத்தவர்கள், விளம்பர விரும்பிகள். அருவருப்பாக இருந்தது எனக்கு. என்ன தார்மீக தகுதி இருக்கிறது இவர்களுக்கு அந்த மனிதருக்கு விழா எடுக்க? சரி போய் தொலையட்டும் என்று இதையெல்லாம் கடந்து ஒரு வழியாக பணியிடத்தை அடைந்தேன், தொடர்ந்தேன். நான் பெரிதும் மதிக்கும் பெருந்தலைவரின் பிறந்தநாளில் அவரை பற்றி என் பங்கிற்கு ஏதாவது எழுத வேண்டும் என்று பணி சூழலுக்கு இடையிலும் நாள்முழுதும் மனம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது, ஆனால் முடியவில்லை. காரணம், கொண்டிருக்கிற வேலை அப்படி.  நினைத்தவற்றை நினைக்கிற மாத்திரத்தில் எழுதிவிட என்னை போன்றவர்களுக்கு இந்த இயந்திர உலகம் வாய்ப்புகளை கொடுப்பதில்லை. இப்படியாக நாள் நகர்ந்து கொண்டிருக்க, எப்படியாவது எழுதிட வேண்டும் என்று எத்தனித்த வேளையில் வெயிலுக்கு இதமாக ஒரு பழரசம் அருந்திவிட்டு வந்து எழுதுவோம் என்றிருந்தது. அருகிலிருந்த பழக் கடைக்கு சென்றேன். ‘ண்ணா…….. ஒரு முலாம் ஜூஸ், ஐஸ் போட்டு' என்று சொல்லிவிட்டு காத்திருந்தேன்,  அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். யத்தேச்சையாக அந்த கடையில் தொங்கி கொண்டிருந்த காலண்டர் கண்ணில் பட்டது. அதில் காமராஐரின் மார்பளவு புகைபடம் , அவர் புன்னகைத்தபடி இருந்தார். அவர் மார்புக்கு கீழே ஏதோ எழுதியிருந்தது, உற்று நோக்கி வாசித்தேன் ‘நாடார் மஹாஐன சங்கம்' என்று எழுதியிருந்தது. எத்தனை கொடூரமான அடையாளத்தை அந்த மாமனிதருக்கு இந்த சமூகம் இன்று கொடுத்திருக்கிறது. பார்த்தகனத்தில் அருவருப்பாக இருந்தது. சிறுமையாக இருந்தது. மீண்டும் ஒருமுறை அந்த காலண்டரை பார்த்தேன் இந்த முறை காமராஐர் இந்த சமூகத்தை பார்த்து கேவலமாய் சிரிப்பதாக தோன்றியது. இடைப்பட்ட நேரத்தில் பழரசம் வந்தது வாங்கி கடகடவென குடித்து காகித கோப்பையை குப்பையில் எரிந்தேன், உடன் காமராஐரை பற்றி ஏதாவது இந்த சமூகத்துக்கு சொல்ல வேண்டும், எழுத வேண்டும் என்ற என்னத்தையும் சேர்த்து. அந்த பெருந்தலைவரை பற்றி இந்த கேடுகெட்ட சமூகத்திடம் இனி பேச என்ன இருக்கிறது. கிடு கிடுவென கிளம்பி மீண்டும் அந்த இயந்திர வாழ்க்கைக்குள் நுழைந்தேன்.

4 comments:

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...