எனக்கு பெயர் நினைவில்லாத ஒரு நண்பர் பால்கட்டு சிறுகதைப் பற்றி முகநூலில் எழுதியிருந்த பதிவைப் படித்து விட்டுதான் இணையத்தில் துலாவினோன் அமரந்த்தாவின் பால்கட்டு சிறுகதையை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கோவை புத்தகக் கண்காட்சியில் நண்பர் கேசவன் தனக்காக வாங்கிவரும்படிச் சொன்ன புத்தகத்தில் அமரந்த்தாவின் வலி சிறுகதைத் தொகுப்பும் ஒன்று.
அந்தத் தொகுப்பை கேசவனிடம் கொடுப்பதற்கு முன்னால் வாசித்துப் பார்க்கலாம் எனப் புரட்டியபோது அந்த சிறுகதைத் தொகுப்பின் முதல் சிறுகதையாகவே இருந்தது, இணையத்தில் நான் தேடிக் கிடைக்காத அமரந்த்தாவின் பால்கட்டு சிறுகதை. கேசவனை சந்தித்து புத்தகத்தை கொடுப்பதற்காக திருச்சிக்குப் பேருந்தில் பயணப்பட்டபோதுதான் வாசிக்கத் தொடங்கினேன்.
இதுவரையில் பெண்களின் உடல்சார்ந்த புரிதல் என்பதே பெரிதாக இல்லாதிருந்த எனக்கு அந்தக் கதையின் ஒன்றிரண்டு பக்கங்களை கடந்தபின்னால் தொடர்ந்து படிப்பதற்கு கடினமாகவே இருந்தது. கைகள் நடுங்கியது. அடுத்தடுத்த வரிகளை நோக்கி கண்கள் நகர மறுத்தது. உடல் கூசியது. தரையில் கால் ஊன்ற முடியவில்லை. சுற்றிலும் வியாபித்திருந்த வெயிலிலும் கூட கண்கள் இருட்டியது, இருளாகவே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் நான் குற்ற உணர்வுக்குள்ளானேன்.
அப்படி எதை பற்றிதான் இந்த கதை பேசுகிறது?
பால்கட்டு - மாரில் கட்டிபட்டு போகும் தாய்ப்பால், பிள்ளை பெற்ற ஒரு பெண்ணை எப்படியெல்லாம் வதைக்கிறது என்பதுதான் கதை.
சரி, அதறக்கெல்லாமா ஒருவர் குற்ற உணர்வுக்குள்ளாகிறது? அதுதானே இயற்கை!
சரி, அதறக்கெல்லாமா ஒருவர் குற்ற உணர்வுக்குள்ளாகிறது? அதுதானே இயற்கை!
அதுதான் இயற்கை என்பதில் எனக்கெந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த இயற்கைக்கு முன்னும் பின்னுமான பெண் உடல் சார்ந்த நம்முடைய தற்கால அல்லது கடந்தகால புரிதல் எப்படியாக இருக்கிறது, இருந்திருக்கிறது என்பதை சிந்தித்த பிறகுதான் அந்த சிறுகதை என்னை குற்ற உணர்வுக்குள்ளாக்கியது.
பள்ளிக்காலங்களை விட கல்லூரிக்குள் நாம் அடியெடுத்து வைத்தப் பின்னால் நம்முடைய புரிதல், மொழி, கேளிக்கை கொண்டாட்டம் பெண் மீதான பார்வை என அத்தனையும் முற்றிலும் மாறுபடுகிறது. அதுவரையில் பெரிதாக எந்த விதமான அருவருக்கத்தக்க மொழியோ பார்வையோ செலுத்தியிருக்காத நாம்தான் கல்லூரிக்குள் சென்ற பின்னால் பெண் மீதும் பெண்ணுடல் மீதும் பார்வையையும் மொழியையும் அத்துமீறி பிரயோகிக்கிறோம். பால்வண்டி , மட்டப் பலகை என்றெல்லாம் மொழியில் பெண்ணுடலை வைத்து பெண்களை கிண்டலடிக்கும் நாம்தான் அவள் உடல் முழுவதும் வரம்புமீறி பார்வையை பரப்புகிறோம், ரசிக்கிறோம் என்கிற பெயரில் பரிகாசிக்கிறோம். இல்லை இல்லை நான் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்பவர்கள் இங்கு பலர் உண்டென்றாலும் இப்படியான பேச்சுகள் தெறிக்கும் கூட்டங்களில் நிற்கும் சில காதுகளில் அவர்களுடைய காதுகளும் நிச்சயம் இருந்திருக்கும், அவர்களும் அதில் சம்மந்தப்பட்டவர்களாகவே இல்லாமலிருந்தாலும் சம்மந்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
பெரிதாக பெண்ணுலகத்தை பெண்களின் பிரச்சனைகளை பெண்கள் அனுதினமும் அனுபவிக்கும் வலிகளை பெரும்பான்மையான ஆண்கள் அறிந்திருப்பவர்களாகவே இருப்பதில்லை. ஆண்களுக்கு அவற்றை கற்பிக்கிற வழிமுறைகளோ, வீட்டிலும் சரி கல்வி நிலையங்களிலும் சரி அறவே இல்லை. அப்படியான ஒரு சூழலில் பிறந்து படித்து வளர்ந்த நான் பெண் மீதான பார்வை அத்துமீறலையும், கொச்சை உடல் வர்ணனைகளையும் சொல்லியோ கேட்டோ வந்தவனாகத்தான் இருந்திருக்கிறேன் என்பதால் என்னை அமரந்த்தா பால்கட்டு கதையின் மூலமாக ஓங்கி அறைந்து, குட்டிக் குட்டி கற்பிக்கிறார், குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறார். பார்வையையும், பயன்படுத்தும் கொச்சை மொழியையும் பரிகாசச் சொற்களையும் தவிர்க்கச் சொல்லாமல் சொல்கிறார்.
பால்கட்டு கதையில் வரும் அந்த தாய் படுகிற துயரை, வலியை வாசிக்கிறபோது உதடுகள் இதயத்தோடு சேர்ந்தே துடித்தன. முதல் முறை இந்தக் கதையை வாசிப்பதால்தான் அப்படி தோன்றுகிறதென்று நினைத்து மீண்டும் ஒருமுறை வாசித்தேன் அதே துடிப்பு அதே நடுக்கம் உடலிலும் மனதிலும். மீண்டும் ஒருமுறை, மீண்டும் ஒருமுறை, மீண்டும் மீண்டுமென நான் பலமுறை வாசித்தேன் அந்த சிறுகதை ஏற்படுத்தும் அதிர்வுகளிலிருந்து மீளத்தான் முடியவில்லை.
அன்றிலிருந்து இன்றுவரை நான் சந்திக்கிற நண்பர்களிடமெல்லாம் பால்கட்டு சிறுகதை கொடுத்து படிக்கச் சொல்லியோ வாசிப்பில்லாத நண்பர்களிடத்தில் பால்கட்டு கதையை சொல்லியபடியேதான் இருக்கிறேன். ஏனென்றால் ஆண்களின் கண்களால் புரிந்துக்கொள்ளப்படாத வலிகளை புரியும்படி செய்ய வேண்டும், பால்கட்டு பேசப்பட வேண்டிய விஷயம், நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம்.
வலிகளை பேசுவோம்……
வலிகளை பேசுவோம்……
அமரந்தாவின் வலி சிறுகதைத் தொகுப்பை வாசிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்புகளை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்
1. பனுவல் புத்தக நிலையம்
https://www.panuval.com/amarandha/vali-10004345
2. புதினம் புக்ஸ்
http://puthinambooks.in/vali
3. Comonfolks
https://www.commonfolks.in/books/d/vali
4. டிஸ்கவரி புக் பேலஸ்
http://discoverybookpalace.com/products.php?product=வலி-%7B47%7D-vali
5. We can shopping
http://www.wecanshopping.com/products.php?product=வலி-%252d-அமரந்த்தா
6. Udumalai.com
https://www.udumalai.com/vali.htm
No comments:
Post a Comment