Monday, 26 November 2018

உயிர மட்டும்....



மே17 இயக்கத் தோழர்களோடு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதற்கட்ட கள ஆய்விற்காக பட்டுக்கோட்டை அருகிலுள்ள வெள்ளூர்-தோப்புக்காலணி பகுதிக்கு சென்றிருந்தேன். ஆய்வின்போது அன்றைய தினத்தின் இறுதியாக ஒரு வீட்டிற்குள் நுழைந்த போது என்னை எதிர்பார்த்தவராகவே தென்பட்டார் கணேசன். நான் உள்ளே சென்றதும் நாற்காலியை எடுத்துப் போட்டு "வாங்கய்யா உக்காருங்க...." என்றார். மனைவி தனத்திடம் காபி வைக்கச் சொன்னார், "களப்பா இருப்பிய இந்த வாழ பழத்த சாப்பிடுங்க" என்று இரண்டு வாழைப் பழங்களை எனக்கு சாப்பிடத் தந்தார். சாப்பிட்டுக் கொண்டே கேட்டேன் " அய்யா எப்படி இருக்கிங்க?" அவர் வீட்டை சுற்றி விழுந்து கிடந்த நான்கைந்து தென்னை மரங்களை பார்த்தார், தரைதட்டி கிடக்கும் மாட்டுக் கொட்டகையை கண் கலங்கிய படி பார்த்தார், நாற்காலியிலிருந்து எழுந்து  “எங்கூட வாங்க தம்பி….” என்றவர் வீட்டின் பின்புறம் நோக்கி நடந்தார். வீட்டின் பின்னால் ஏறக்குறைய ஒரு ஏக்கர் நிலம், நிலம் முழுவதும்  தென்னை மரம், பிணங்களாக குத்துயிரும் குலையுயிருமாக.
“ பாருங்க ஒரு ஏக்கர் முழுசும் தென்ன, அந்தா ரோட்டுக்கு அந்தப் பக்கம் ரெண்டு ஏக்கரும் தென்னை…..”

“எத்தனை மரம் வெச்சிருப்பிங்க”
“ நூத்தம்பது மரம் தம்பி முறிஞ்சும் தூறோட சரிஞ்சும் நெலத்துல கெடக்கு. சொச்சம் பொழைக்குமான்னா, தெரியல. பொழச்சாத்தான் உண்டு மொத்தம் எத்தினி மரமுன்னுலாம் நியாவகம் இல்ல” என்றவர் கண்களிலிருந்து கண்ணீரையும் இழப்பின் வலியையுமே என்னால் காண முடிந்தது. ஆறுதலாக நாலு வார்த்தை எங்கிருந்து  தேடி எடுத்து சொல்வது? வேரோடு சரிந்தும் முறிந்தும்  கிடக்கிற மரங்களை பார்த்தபடியே வாயடைத்து நின்றிருந்தேன். அவரே கேட்டார் “ வந்ததும் என்னமோ கேட்டிங்களேப்பா எப்படி இருக்கிங்கன்னு தானே…. மொத்தத்தையும் பிடிங்கி எடுத்துப்புட்டு வெறும் உயிர மட்டும் விட்டுப் போயிருக்கு… உயிரோட இருக்கோம் அதான் சொல்ல முடியும்.” உள்ளபடியே புயல் காற்று அவரிடமிருந்த சகலத்தையும் சின்னா பின்னமாக்கிவிட்டு  உயிரை மட்டுமே விட்டு விட்டுச் சென்றிருக்கிறது.

கணேசனுக்கு இரண்டு மகள் ஒரு மகன். மகன் படிப்பை முடித்து விட்டு சென்னையில் சிறியதாக தொழில் தொடங்கியிருக்கிறான். மூத்த மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அவர் திருமணத்திற்காக நான்கரை லட்சத்திற்கு விவசாய நிலத்தை அடமானம் வைத்து  கடன் பெற்றுத்தான் திருமணத்தையே முடித்திருக்கிறார். அந்தக் கடன் இன்னும் முடிந்தபாடில்லை வட்டி மட்டுமே மாதா  மாதம் வாரி இறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது . மனைவியின் பெயரில் மகளீர் சுய உதவிக் குழுக் கடன் ஐம்பதாயிரம். இதுபோக இளைய மகளுக்கு சம்மந்தம் பேசி முடித்திருக்கிறார், தேதி மட்டும் குறிக்கவில்லை வரதட்சணை பேரமெல்லாம் மாப்பிள்ளை வீட்டின் திருப்திக்கு பேசி முடிக்கப்பட்டு விட்டது. “ஏற்கனவே அஞ்சு லட்ச கடன், மேற்கொண்டு கடன் வாங்க கூடாதுன்னு தான் அப்பா வியாவாரிகிட்ட பேசியிருந்தாரு , மூணு காப்புல கடன பூரா முடிச்சிப்புடலாம் நீ கவலப்படாத ஆயின்னுட்டு போனாரு அந்தண்ணன்….ஆனா இப்ப…”என்ற கேள்விக் குறியோடு  இடைமறித்து பேசத் தொடங்கிய   பேச்சை முடித்த கணேசனின் இளைய மகளின் வாழ்க்கையும் கஜா புயல் கேள்விக் குறியாக வளைத்துப் போட்டுத்தான் சென்றிருக்கிறது.
கணேசனிடம் தொடர்ந்து பேசி விசாரித்ததில் விழுந்த ஒவ்வொரு மரமும்  25 வருடகால மரங்கள். வருடத்திற்கு ஆறிலிருந்து ஏழு காப்பு காய்த்த மரங்கள். எப்படி கணக்கிட்டாலும் அவருடைய இழப்பென்பது குறைந்தபட்சம் எட்டிலிருந்து ஒன்பது லட்சமாவது வரும். இழப்பு ஒருபக்கம், வங்கி மற்றும் சுய உதவிக் குழுக் கடன் மறு பக்கம் என சேர்த்து உத்தேசமாக கணேசன் தற்போது  14 லட்சத்தை ஈடு கட்ட வழி தெரியாமல் அல்லாடுகிறார், மகளின் பேசி முடிக்கப்பட்ட திருமணம்  கணேசனின் குடும்பத்தையே அச்சுறுத்திக் கொண்டு நிற்கிறது. இவற்றிற்கு மத்தியில் கடனை அடைக்க வழித் தெரியாமல் அடமானத்திலுள்ள நிலத்தின் எதிர்காலம் அவரிடத்திலே நிலைக்குமா என்பது புரியாமல் மகளின் முகத்தை பார்த்தபடியும் வீழ்ந்து கிடக்கிற தென்னை மரங்களை நினைத்தபடியும் என் எதிரே அமர்ந்திருந்தார் கணேசன்.

ஏறக்குறைய கேட்டு பூர்த்தி செய்ய வேண்டிய அத்தனையும் அவரிடமிருந்து பெற்று  ஆய்வு படிவத்தில் நான் பூர்த்தி செய்திருந்தேன். சூடாக காபி வந்தது , எடுத்து உள்ளே ஒரு மிடறு அனுமதித்தேன். ஒட்டி உலர்ந்த தொண்டைக் குழிக்குள் சூடாக கணேசன் வீட்டு காப்பி பயணித்தது. முழுவதுமாக பருகி விட்டு  விடைபெற்று எழுந்து நடந்தேன் சாலையின் இருபுறமும் பிணங்கள், அத்தனையும் மரங்கள், தந்திக் கம்பங்கள், கூரை வீடுகள், உடைந்த ஓடுகள்,  ஆங்காங்கே பரிதவிப்போடு வெறும் நம்பிக்கையை மட்டும் சுமந்தபடி செய்வதறியாது வாழும் மனித முகங்கள். அத்தனையும் பார்த்துக் கொண்டே நடந்தபோது கணேசன் சொன்னது தான் நினைவிற்கு வந்தது “….மொத்தத்தையும் பிடிங்கி எடுத்துப்புட்டு வெறும் உயிர மட்டும் விட்டுப் போயிருக்கு… உயிரோட இருக்கோம் அதான் சொல்ல முடியும்.” இன்னும் எத்தனை கணேசன்களை சந்திக்க வேண்டுமோ....

இன்னும் எழுதுகிறேன், கள ஆய்வின் நினைவுக்குறிப்பிலிருந்து.....

1 comment:

  1. நல்ல ஆய்வு தோழர் தொடர்ந்து பயணிக்கவும்

    ReplyDelete

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...