நான்கு சுவற்றுக்குள் நான்கு நாட்களாக கடந்த கால நினைவுகளிலிருந்து மீள வழிதெரியாமல் சிக்கிக் கொண்டு தவித்த எனக்கு சற்றும் எதிர்பாராத அவளது அழைப்பு சிறு ஆறுதலாக அமைந்தது.
நான்கு வருடங்களுக்கு பிறகு நான் கேட்ட அவளது குரல் அந்த அறையிற்குள்ளிருந்தும், இருளுக்குள்ளிருந்தும் என்னை வெளியே எடுத்துப்போட்டது. அதற்குமேல் அந்த தனிமையும், பெருநகரத்து இரைச்சலும் எனக்கு தேவைப்படுவதாய் தோன்றவில்லை. இரவே புறப்பட்டு திருச்சியில் விடியலை எதிர்நோக்கினேன்.
நல்ல உறக்கம் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு பிறகு. மனது லேசாக இருந்தது. மனச்சிதைவுக்கும், மூளை செயலிழப்புக்கும், தற்கொலையை நோக்கி நகர்வதற்கான அத்தனை காரணிகளும் ரயில் படுக்கையிலிருந்து எழுந்த போது இருந்த இடம்தெரியாமல் காணாமல் போயிருந்தது. என்னால் சுவாசிக்க முடிந்தது.
இரவே கேசவனிடம் சொல்லியிருந்தேன் காலை வந்து அழைத்துச் செல்லும்படி. ரயில் கொஞ்சம் தாமதம், வழக்கம்போல கேசவன் அழைத்துச் செல்ல வருவதிலும் தாமதம். ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்தேன். காத்திருந்தேன். செல்போனுக்குள் சென்றுவிடாமல் மக்களின் ஓட்டத்தை பார்த்தபடியே நின்றிருந்தேன்.
"ஒரு ரெண்டுரூவா இருந்தா தா கலர் குடிக்கனும்....." என்று உரிமையான குரல். குரல் வந்த திசை நோக்கி திரும்பினேன், முக்காடிட்டு முப்பது வயதொத்த பெண்மணி. சட்டை பையில் தேடினேன், சில்லரை இல்லை. அவர் கேட்ட இரண்டு ரூபாய்க்கு பதில் பத்து ரூபாய் காகிதத்தை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்டு, புன்னகையை நன்றியாக உதிர்த்துவிட்டு நாலடி நடந்தவர், திரும்பி " நீ lifeல நல்லா வருவ...." என சொல்லிவிட்டு நடையைக்கட்டினார்.
வழக்கமாக எல்லாரும் சொல்வதுதான் என்றாலும் இவரிடத்தில் ஒரு வித்தியாசத்தை உணரமுடிந்தது. Lifeல என்று அவர் சொல்லிச் சென்ற ஆங்கில வார்த்தை ரசிக்க செய்தது. ஆங்கிலமும் தமிழும் கலந்த அவர் எளிய குரலில் அழகியல் தெரித்தது. அவர் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த திசையிலேயே கேசவனும் வந்தான். ஏறி அமர்ந்து அவனுடன் புறப்பட்டேன். தற்காலிகமாக மீண்டு வந்திருந்த என் முகத்தை குளிர்ந்த காலை காற்று ஒத்தியெடுத்து நகர்ந்தபடியிருந்தது.........
No comments:
Post a Comment