இந்தச் சூழலில் அவருடனான சந்திப்பு வாய்க்குமோ வாய்க்காதோ என்கிற நிச்சயமற்றத் தன்மையோடுதான் நான் நேற்றிரவு திருச்சியிலிருந்து கிளம்பினேன்.
சில நாட்களுக்கு முன்பாகவே தோழர் பாலாஜியிடம் கேட்டிருந்தேன். அடுத்து சென்னைக்கு நீங்கள் எப்போது சென்றாலும் சொல்லுங்கள் நானும் வருகிறேன், தோழர் திருமுருகன் காந்தியை சந்திக்க வேண்டும். அது எனது நீண்டநாள் ஆசை என்பதோடு அவர் சிறையிலிருந்து வெளியாகி உடல் நலிவுற்றிருக்கிற இந்தவேளையில் சந்தித்து குறைந்தபட்சம் உடல்நலம் குறித்தாவது விசாரித்துவிட்டு வரவேண்டும் என்கிற என் கோரிக்கையை அவர் முன் வைத்தேன். அடுத்தமுறை செல்கிறபோது அவசியம் சொல்கிறேன் என உறுதியளித்தார். சொன்னபடி நான் சென்னை செல்கிறேன், வாய்ப்பிருந்தால் வாங்க அவரை சந்திக்கலாம் என்றார். அவர் சொன்னதும் வேறெந்த வேலைக்கும் ஒத்துக்கொள்ளாமல் சென்னை வந்து தோழரை சந்திப்பதே பிரதானமான திட்டமாக முடிவு செய்து கிளம்பினோம், கடைசி நேரத்தில் கேசவனால் வர இயலவில்லை. நான் மட்டுமே கிளம்பி இன்று காலை சென்னை வந்தடைந்தேன்.
காலையில் திட்டமிடப்பட்ட சந்திப்பு, மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டு, மேற்கு மாம்பலத்திற்கு அருகிலுள்ள ஒரு பழச்சாறு கடையில் காத்திருக்கும்படி தோழர் பாலாஜி சொன்னார், காத்திருந்தேன். தோழர் பாலாஜி வருவார், வந்து எனை அழைத்துச் செல்வார் என தான் நினைத்திருந்தேன். மாறாக தோழர் பாலாஜி, தோழர் திருமுருகன் காந்தியினுடனே வந்திருந்தார். எதிர்பார்த்த சந்திப்பாகவே அது இருந்தாலும் கூட எதிர்பாராவிதத்திலேயே நிகழ்ந்தது.
நான் சார்ந்திருக்கிற அமைப்பு அதன் கொள்கை முடிவுகள் இதையெல்லாம் தாண்டி தனிமனிதனாக, சகமனிதனாக தோழர் திருமுருகன் காந்தியின் மீது நான் கொண்டிருக்கிற மரியாதையும் அன்பும் தனித்துவமானது. அவர்மீதான எனதன்பு அவர் மீது கொண்டிருக்கிற நம்பிக்கையினாலே பிறந்தது. இன்றைக்கும் நாளைக்குமான நம்பிக்கையாகவே நான் திருமுருகன் காந்தியை பார்க்கிறேன்.
கல்லூரியின் இறுதியாண்டு காலத்தில் என நினைக்கிறேன், ஒரு காணொளியை வாட்ஸப் வாயிலாக காண நேர்ந்தது. அந்த காணொளி நடந்து முடிந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின் வெட்டி அனுப்பப்பட்ட சிறு பகுதி. மத்திய அரசு உலக வர்த்தக நிறுவனத்துடன் போட்டுக்கொண்டிருக்கிற ஒப்பந்தம் குறித்தும் அதனால் ஏற்படப்போகிற இழப்புகள் பற்றியும்,ரேஷன் கடைகளின் எதிர்காலம் பற்றிய செய்திகளுமாகவே இருந்தது அந்த சிறு பகுதி காணொளி. அன்று அந்த காணொளியில் பேசிக்கொண்டிருப்பது யார்? நம்மை எச்சரித்துக் கொண்டிருப்பது யார்? என்பது தெரியாமல் அல்லது தெரிந்துக் கொள்ள முயலாமல் எனக்கு சரியென பட்டதும் நண்பர்களிடத்திலும், முகநூலிலும் என் பங்கிற்கு நானும் பகிர்ந்தேன். அன்று அந்த காணொளியில் பேசியது திருமுருகன் காந்திதான் என்பதெனக்கு அப்போது தெரியாது. சில வருடங்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது. அது யார் என நான் தெரிந்துக் கொண்ட காலத்திலே அந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னால் இவையெல்லாம் நடக்குமென அவர் எச்சரித்த வார்த்தைகள் காட்சிகளாக நடந்தேறத் தொடங்கியிருந்தது. இன்று அதன் பலன்களை அறுவடை செய்தபடியே மோசமான சூழலை நோக்கி நாம் நகர்ந்துக் கொண்டிருப்பதை பாரக்கும்போது அன்று அவருடைய கணிப்பு எத்தனை துல்லியமானதாக இருந்திருக்கிறது, அவருடைய பார்வை எத்தனை தொலைநோக்கு சிந்தனையுடையதாக இருந்திருக்கிறது என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அந்த சிந்தனையும் அந்த பார்வையும் அந்த அவதானிப்பும் நாளைக்கான தலைவராய் அவரிருப்பார் என என்னை தீர்க்கமாக நம்ப வைத்தது. அன்று எச்சரித்தவர்தான் திருமுருகன் காந்தி என்று தெரிந்தபின்னால் அவர் மீது இன்றைக்கும் நாளைக்குமான நம்பிக்கை சேர்ந்தே பிறந்தது, மதிப்பும் மரியாதையும் அன்பும் கூடியது.
அப்படியாக நான் நம்புகிற மதிக்கிற அன்பு வைத்திருக்கிற தோழரை நேரில் சந்திக்கிறேன் முதன்முறையாக. கைது, அலைக்கழிப்பு, மருத்துவமனை என அத்தனை சிரமங்களுக்கும் ஆட்பட்டு ஓய்விலிருக்கிற தோழரிடம் வணக்கம் சொல்லி கை கொடுத்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் எதிர் இருக்கையில் அமர்ந்தேன். நலம் விசாரித்தேன். சென்னை வந்ததன் பிரதான நோக்கமும் அதுவே. அவர் என்னை பற்றி விசாரித்தார், சொன்னேன். பிறகு சில நிமிட மௌனம். என்ன பேசுவது எங்கிருந்து தொடங்குவது என்றெல்லாம் ஏகப்பட்ட சிக்கல் எனக்குள். நிறைய பேச வேண்டுமென நினைத்துதான் வந்தேன். ஆனால் வாய்வரவில்லை. தளர்ந்த முகத்தோடு, ஒரு வித அயர்ச்சியோடு முன்னால் அமர்ந்திருந்த மனிதரை நிறைய பேசி தொந்தரவு செய்யக்கூடாதென உள்ளூர தோன்றியது. இந்த சந்திப்பும் கூட ஓய்விலிருந்த அவரை தொந்தரவு செய்திருக்குமோ என்கிற நினைப்பும் என்னுள் எழுந்து எழுந்து அடங்கியது என்றபோதிலும் அவ்வப்போது எதாவது பேசத் தொடங்கி சட்டென முடித்து சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடங்கி முடிந்து, தொடங்கிக் கொண்டே நீண்டிருந்த உரையாடலில் அவர் உடல் தளர்ந்திருந்தாலும் எண்ணத்திலும், உள்ளத்திலும் துளி தளர்வில்லாததை காண முடிந்தது, நம்பிக்கை தந்தது.
அதுவே அவருடைய பலம். அவருடனான சந்திப்பு, அவருடனான உரையாடல், அவர் உடல்நலம் தேறிவருவதையெல்லாம் நேரடியாக பார்த்ததில் மகிழ்ச்சி என்பதைத் தாண்டி அந்த சந்திப்பு எனக்குள்ளாக ஏற்படுத்திய தாக்கம் வருங்காலத்தில், களத்தில் நான் எத்தனை உறுதியோடு நிற்க வேண்டும், எவ்வளவு வலிமையாக போராட வேண்டும், உரிமைக்காக குரல் எழுப்ப வேண்டும் என்பதற்கு ஊக்கியாக இருக்கும் என என்னால் அவதானிக்க முடிந்தது.
இந்த சந்திப்பை சாத்தியப்படுத்திய தோழர் பாலாஜிக்கு என் அன்பும் நன்றியும்.
No comments:
Post a Comment