நேற்று இரவுதான் பேசும் புதிய சக்தியில் வெளிவந்திருக்கிற எழுத்தாளர் நா.விச்வநாதனின் நேர்காணலைப் படித்தேன்.
கவிதைகள் படைப்புகள், கு.ப.ரா. நா.பிச்சமூர்த்தி, க.நா.சு, லா.ச.ரா, மௌனி, தஞ்சை ப்ரகாஷ், சிசு.செல்லப்பா, வண்ணதாசன், கலாப் பிரியா, என எழுத்தாளர்களைப் பற்றி பலவற்றை அவர் பகிர்ந்துக் கொண்டதைத் தாண்டி இந்த நேர்காணலில் நுணுக்கமாக நாம் அணுகிப் பார்க்க வேண்டிய விஷயம் ஒன்றிருந்தது.
அக்ரஹாரத்துக்குள்ளாக ஒடுக்கப்டுகிற, புறந்தள்ளப்படுகிற மக்கள் குறித்த புரிதலே இல்லாத இந்த சமூகத்தில் புரிதலை ஏற்ப்படுத்துகிற முயற்சியாக அவர் குறிப்பிடுகிற ஏற்றத்தாழ்வுகளை, ஒடுக்குமுறைகளை வாசிக்கும்போது தெரிகிறது.
அக்ரஹாரத்துக்குள் ஒடுக்கப்படுகிற, தலித்துகளாக பாவிக்கப்படுகிற குருக்கள்களுக்கு ஜீவிதம் ஆதிசைவ பிராமணரல்லாதோர் தட்டுகளிலிடும் காசுதான். ஐயர்களிடம் தட்டில் காசுபோடும் வழக்கம் இல்லை. முன்போல அல்லாமல் இப்போது குருக்கள்களின் நிலைமை மாறிவிட்டது. ஜோதிடம், வாஸ்து, அருள் வாக்கு, பரிகாரம் சாந்தி என மக்கள் கோவில்களை தேடி ஓடுகிறார்கள், அதனால் பொருளாதாரம் என்னவோ ஏறுமுகம்தான். இன்றைக்கு சரி, அடுத்த தலைமுறைக்கு? கோவில் என்கிற ஒரு கட்டுமானம், கோவில் என்கிற ஒரு அமைப்பின் மீது ஈர்ப்பு குறைகிறபோதோ அல்லது முற்றிலுமாக தகர்க்கப்படுகிற சுழலுக்கு நாம் போய் நிற்கும்போதோ வெறும் பொருளாதார ஏற்றத்தை மட்டுமே கொண்டிருக்கிற ஒரு சமூகம் என்னவாகும் என்கிற தொலைநோக்குப் பார்வையோடு வெறும் பொருளாதார ஏற்றம் என்பது மாற்றமல்ல என்கிறார். ஞானத்தை அடைவதே மாற்றத்திற்கு வழி, ஞானமே எதிர்காலம். அதை நோக்கி அவர்களை நகர்த்துவதற்கு பெரியவர்களோ, அமைப்புகளோ இல்லை என ஆதங்கப்படுகிறார்.
பால் குடம் , காவடி தூக்கினால் கூட ஒன்றிரண்டு குடங்களுக்கு மட்டுமே அனுமதி, அதுவும் கோவில் வாசலைத்தான்டி உள்ளே நுழைய அனுமதியில்லை என இன்றும் தொடரும் இந்த புறக்கணிப்பை, அரசூர் முருகன் கோவிலுக்கள் தலித்துகளை ஆலயப்பிரவேசம் செய்து தகர்ந்தெறிந்ததை பற்றி விளக்கி கூறும்போது காவல்நிலையம் கோர்ட் என வந்துவிட்ட பிறகும் கூட கிராமப்புறங்களில் இன்றும் உயிர்ப்போடிருக்கும் நாட்டாமைகளும், கட்டப் பஞ்சாயத்து பேர்வழிகளை பற்றியும் அறிந்துக் கொள்ள முடிகிறது. கலக்கமுறச் செய்கிறது.
இன்றும் இதுபோன்ற ஒடுக்குமுறைகளும் புறக்கணிப்புகளும் தீண்டாமைகளும் தொடர்ந்து தொடர்கிறபோது நாம் களத்தில் கவனம் செலுத்தி இவற்றையெல்லாம் களையெடுக்க வேண்டும் என்பதை இந்த நேர்காணல் சொல்லாமல் சொல்கிறது, வழியாமல் வலியுறுத்துகிறது. அதுவே இந்த நேர்கானலின் மையமென நான் நினைக்கிறேன்.
No comments:
Post a Comment