Tuesday, 9 October 2018

சே, யுகங்கள் கடந்து வாழ்கிறார்.....

1967 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி சே குவேராவின் புரட்சிப் படை சுற்றி வளைக்கப்படுகிறது. அப்போது நடந்த சண்டையில் சே வலது காலில் குண்டடிப்பட்டு விழுகிறார்.  சே உட்பட போராடிய பல தோழர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.  கைது செய்யப்பட்ட சே-வை ஒரு பள்ளிக் கூடத்து அறையில் சிறை வைக்கிறார்கள்.


சே பிடிப்பட்ட செய்தி ரேடியோ ஆப்பரேட்டர்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சே-வை என்ன செய்வதென்று கடுமையான விவாதம் , விவாதத்தின் முடிவில் எந்த விசாரனையுமின்றி சே-வை அக்டோபர் 9 ஆம் தேதி கொலை செய்ய  உறுதி செய்யப்படுகிறது.


சே-வை கொலை செய்ய சே இருந்த  பள்ளிக் கூட அறைக்கு ஒரு ராணுவ வீரன் அனுப்பப்படுகிறான். அறைக்குள் சென்ற சில விநாடிகளில் அவன் நடுநடுங்கி துப்பாக்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடி வருகிறான். 

துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் வெளியேறும்  இயந்திரச் சத்தமில்லை, சே உயிர்போக கதறி ஓலமிடும் ஓசையில்லை, அந்த அறையிலிருந்து எந்த  சத்தமும் வெளியேறவில்லை. வெளியேறியது அந்த ராணுவ வீரன் மட்டுமே, நடுநடுங்கி பீதியில் பயத்தில்.


ஏன்?


அந்த அறைக்குள் அவன் நுழைந்தபோது, பள்ளிக் கூடத்து தரையில் படுத்திருந்த சே “ கொஞ்சம் பொறு… நான் எழுந்துக் கொள்கிறேன்” என்று தன் வாழ்வை முடித்துக் கொள்ள எத்தனித்திருந்த சே குண்டடிப்பட்ட காலோடு, மட்டும் தடுமாறி சுவற்றை பற்றி பிடித்து உந்தி எழுந்து நின்றார். தன் மரணத்தை வரவேற்க அவர் தயாராகவே இருந்தார். சே-வின் அந்த தயார் நிலை, கொல்ல வந்த ராணுவ வீரனை கலங்கடித்திருந்தது.  தனது கால்களை பற்றிக் கொண்டு “என்னை கொன்றுவிடாதே….. என்னை கொன்றுவிடாதே….” என்று சே கதறுவார் என எதிர்பார்த்து வந்த ராணுவ வீரன் கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றை சே செய்திருந்தார். மரணத்திற்கு தயாராய் இருந்தார். கொல்ல வந்தவன் பயந்தோடி வெளியே வந்தான்.


அவன் அறையில் அவன் மேசையின் மீது ஒரு கோப்பையை எடுத்து வைத்தான், கையிலிருந்து போத்தலிலிருந்து அந்த கோப்பையை மதுவால் நிறைத்தான். மது போத்தலை கோப்பையினருகில்  வைத்தான். நாற்காலியில் அமர்ந்தான். இன்னும் அவன் கண்களில் பயம் தொற்றிக் கொண்றிருந்தது. சே-வை கொலை செய்ய அவனுக்கு தரப்பட்ட உத்தரவு அவனை இன்னும் கதிகலங்கச் செய்தது. சே-வின் துனிச்சல் அவன் முன்னால் அவன் ஆண்மையை, அவன் வீரத்தை கிண்டலடிப்பதுபோலவே அவனுக்கு தோன்றியது. மேஜையின் மீதிருந்த மதுவால் நிறப்பப்பட்ட கோப்பையை எடுத்து முழுவதுமாக முழுமூச்சில் குடித்தான். காலிக் கோப்பையை உற்றுப் பார்த்தவாரே அமர்ந்திருந்தான். அவன் முன்னாலிருந்த காலி கோப்பையை போலவே அந்த அறைக்குள் அவன் வெறுமையை உணர்ந்தான். அறைக்குள் நுழைந்த போது சுவற்றில் சாய்த்து வைத்திருந்த துப்பாக்கியை பார்த்தான். இன்னொரு கோப்பை மதுவை வயிற்றுக்குள் நிரப்பினான். முடிந்தவரை வெறியேற்றிக்கொண்டு வேலையை காப்பாற்றிக் கொள்ள விருவிருவென எழுந்தான். சுவற்றில் சாய்த்து வைத்த துப்பாக்கியை தூக்கிக் கொண்டு  சே-வை சிறை வைத்திருந்த  அறையை நோக்கி ஓடினான்.     

துப்பாக்கியோடு சே-வின் முன் நின்றான். அப்போதும் அவன்  நடுங்கினான், கைகளின் நடுக்கம் அவன் துப்பாக்கிப் பிடியில் சே வுக்கு தெரிந்தது. முகத்தில் லேசான புன் முருவலோடு மரணத்தை எதிர்நோக்கி நின்றிருந்த சே ‘‘நீ எதற்கு வந்திருக்கிறாய் என்று தெரியும். ஒரு மனிதனைத்தானே கொல்லப் போகிறாய்? கோழையே சுடு’’ என்றார். அந்தக் கோழை நடுக்கத்துடன் கண்களில் துளி கூட வீரமில்லாமல் நடுங்கியபடியே பயத்தோடு தான் வைத்திருந்த துப்பாக்கியின் விசையை அழுத்தினான், அந்த துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட ரவைகள் ஆறு முறை சே-வின் உடலை துளைத்து வெளியே விழுந்தன.


மரணத்தை எதிர்பார்த்து நின்ற சே சரிந்து கீழே விழுந்தார். பிறப்புக்கும் இறப்புக்கும் மத்தியிலுள்ள இடைவெளியை பயணங்களால், போராட்டங்களால் நிரப்பிய சே-வின் அருகில் சென்று அவன் பார்த்தான், கண்களை திறந்தபடியே லேசான அதே புன் முருவலோடு சே இறந்திருந்தார். அந்த ராணுவ வீரன், மரணித்த சே-வின் கண்களை பார்த்தான். அந்த இரு கண்களிலும் அவன் பிம்பம் தெரிந்தது. இரண்டும் பிம்பத்திலுமே அவன் உடல் நடு நடுங்கியதை அவனால் பார்க்க முடிந்தது. மரணிக்கும் முன் சே சொன்னது அவன் காதுகளில் சே மரித்த பின்னும் கோட்டுக் கொண்டிருந்தது “ கோழையே சுடு….. கோழையே சுடு…..” சே-வை கொன்ற அந்த கோழை அந்த அறையை விட்டு வெளியேறினான். அவன் செலுத்திய ஆறு தோட்டாக்களால் மரணித்த சே-வின் உடல் அந்த அறையில் கிடந்தது.


யுகங்கள் கடந்து சேவின் புகழ் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது….. 


No comments:

Post a Comment

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...