![]() |
என் வெள்ளை காகித வெண்பாக்கள்......... |
நட்புக்காக, நண்பர்களுக்காக தனியாக தினம் ஒதுக்கி கொண்டாடுவதில் எனக்கு பெரிதாக உடன்பாடு கிடையாது. நட்பு - தினம் தினம் கொண்டாடபடவேண்டியது,நண்பர்கள் - கொண்டாடபட வேண்டியவர்கள். ஏன்? சகமனிதனின் மீதான சகமனித அன்பு அத்தனை புனிதமானது. இந்த உலகத்தில் நாம் எதையெல்லாம் புனிதமென்று சொல்லி பிரித்து வகுத்து வைத்திருக்கின்றோமோ அதையெல்லாம் விடவும் புனிதமானது. கடவுள், மதம், சாதி இவையெல்லாவற்றையும் தோற்க்கடித்து மனிதனிடம் வளர்ந்தது சக மனித அன்பு, அதுவே நட்பு. எண்ணற்ற பல கடவுள்களும் அதன் மதங்களும், பற்பல சாதிகளும் செய்ய தவறியவைகளை அனாயசமாக செய்துவிடுகிறது, இயல்பிலே மனிதனிடம் மன்டிகிடக்கிற அன்பு, நட்பு. இந்த நட்பு சில காலங்களுக்கு முன்னால் இந்த சமூகத்தின் கடுமையான கட்டமைப்பிற்குள்ளேயே அடைபட்டுகிடந்தது. அன்றிருந்தவர்களின் நட்பு வட்டாரம் தன் மதத்தவரை தாண்டியும், தன் சாதியை சார்ந்தவர்களன்றியும் பொதுவெளியில் இருந்ததில்லை. இன்று பெரும்பான்மையானவர்கள் சாதி மதம் பார்த்து பழகுவதில்லை, தன் இனம் என்று பிரித்து தனித்து அன்பு செலுத்துவதில்லை. நட்பு, இந்த சமூகம் சுமந்து வந்த ஆயிரமாஆயிரம் ஆண்டு கால பொதிச்சுமையை இறக்கிவைத்திருக்கிறது. அதற்கு எந்த இறுமாப்பும் இருப்பதில்லை, இயல்பாக எளிமையாக இருக்கிறது.
நட்பின் மீது பெருமதிப்பு கொண்டவன் நான்.என் நண்பர்களை பெரிதினும் பெரிதாக மதிக்கிறேன். என் தந்தையிடம் நான் கற்காத வாழ்வியலை நண்பர்களே எனக்கு வகுத்து கொடுத்தார்கள். நட்பின் வழியே நான் உலகை காண்கிறேன். அப்படி பார்ப்பதில் எந்த காட்சிபிழையும் வருவதுகிடையாது. நட்பில்லா உலகம் கற்பனை கூட செய்துபார்க்க முடியாதது. அப்படியொன்றைதான் நரகம் என்று சொல்கிறார்கள். நண்பர்கள் அன்பை தவிர வேறொன்றையும் எதிர்பார்காதவர்கள். அதானலே நான் நட்பை நான் கொண்டாடுகிறேன், இன்றைய தலைமுறையும் கொண்டாடுகிறது. இன்றைய தலைமுறையிடம் நட்பை இறுதி மூச்சு வரை எடுத்து செல்வதில் பெருஞ்சிக்கல் இருப்பதாகவே தோன்றுகிறது. பதின் பருவத்தில் நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிற நண்பர்கள் முதிர் பருவத்தில் ஏன் தொலைந்து போகிறார்கள்?. இயந்திரமாக கால போக்கில் நாம் ஓட தொடங்குகிற இடத்திலே நட்பையும், நண்பர்களையும் நாம் தொலைத்துவிடுகிறோம். இதை மாற்ற என்ன வழி? என் இனிய தோழர்களையும் தோழிகளையும் என் இறுதி மூச்சுவரை என்னோடு எப்படி கூட்டிக்கொண்டே ஓடுவது? எல்லோரிடத்திலும் ஒருகட்டத்தில் எழுகிற கேள்வியும், கவலையும் இது. எனக்குள்ளும் பலதருனங்களில் எழுந்திருக்கிறது. பதில் மிக எளிமையானது, நட்பை, உறவாக்கிகொள்வதில் இருக்கிறது விடை. 'அது எப்படி நட்பு, உறவாகும்? நண்பர்கள் வேற, சொந்தபந்தம் வேற' என்றெல்லாம் சொல்லி திரிபவர்கள் ஏராளம். நான் கூட சொல்லி திரிந்தவன்தான். எப்போதுவரை என்றால் என்னுடைய கவலைக்கும், கேள்விக்கும் பதில் கிடைக்கும் வரை.
என்னுடைய அந்த கவலைக்கும், கேள்விக்கும் விடை என் குடும்பத்திலிருந்தே கிடைத்தது, என் உறவுமுறையே அதற்கு பதில் தந்தது. என் சொந்தத்தில் எனக்கொரு பெரியப்பா இருக்கிறார். எல்லா சுப, துக்க காரியங்களிலும் முன் நிற்பார், முன்னெடுப்பார். சிக்கலான பல தருனங்களையும், சண்டைச் சச்சரவுகளையும் அவரே தீர்த்து வைப்பார். அவர் நல்ல ஆலோசகர், நல்ல மனிதர். எல்லோரிடமும் நடுநிலையாகவே இருப்பார். அவர்மீது எனக்கு பெருமதிப்பு உண்டு. ஒருநாள் ஓர் யதார்த்த உண்மை யத்தேச்சையாக எனக்கு தெரியவந்தது. அந்த பெரியப்பா என் உறவுமுறை கிடையாது என்றும், அவர் என் தகப்பன் வழி சொத்தக்காரரின் நண்பர் என்றும், பிற்காலத்தில் அவர் எங்கள் குடும்ப நண்பராகி, எங்கள் குடும்பமாகி, உறவாகவே தொடரந்துகொண்டிருக்கிறார் என்றும் அறிந்துக் கொள்ள முடிந்தது. அந்த அறிதலில் தான் என் கவலைக்கும், கேள்விக்கும் விடை கிடைத்தது. நட்பு வெறும் நட்பாகவே இருந்தால் காலப்போக்கில் காலாவதியாகிவிடும். நட்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும், நட்பு உறவாக வேண்டும், நட்புறவு நாம் கொள்ள வேண்டும். அடுத்த சந்ததியிடம் நம் நண்பர்களை குடும்பத்தின் அங்கமாக, உறவினராக மாமன் என்றோ, அத்தை என்றோ, பெரியப்பன் சித்தப்பன் என்றோ, பெரியம்மா சின்னம்மா என்றோ அறிமுகபடுத்திவிட வேண்டும். நட்பு இப்படியாகத்தான் நம் வாழ்வின் நம் குடும்பத்தின் அங்கமாக முடியும், அதுவே நட்பின் எதிர்காலம். இப்படியாகத்தான் நம் இறுதி மூச்சிவரை நட்பால் நண்பர்களால் பயணப்பட இயலும். நட்பை, நட்பாக மட்டுமே நம்மிடம் நாம் வைத்திருப்போமேயானால், என்றோ ஒருநாள் எங்கோ நாம் நம் நட்பை தொலைத்திருப்போம்.
நம் நண்பர்களை நம் குடும்பத்தார்க்கு அறிமுகம் செய்திடவேண்டும். நம் நட்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். எல்லா சுப துக்கங்களிலும் பங்கு பெற வைக்க வேண்டும். அதன் வழியே நட்பின்தொடர்ந்த பயணம் சாத்தியபடும். நண்பர் வீட்டு சுப நிகழ்விற்கு முந்தைய நாளே சென்று குடித்துவிட்டு குப்புற படுத்துக்கிடந்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக இருந்த இடம் தெரியாமல் எழுந்துவந்துவிடுவது நட்பை ஒருநாளும் உறவாக்காது. குடியும் வேண்டும்,நண்பர் குடும்பத்தோடு இனக்கமான உறவும் இருக்க வேண்டும்.
மனித வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் அல்லாது அன்பு சொலுத்துகிற நட்பை சம்பாதிப்பது சுலபம். அது எல்லோருக்கும் சாத்தியம். அதே அன்பை, அதே நட்பை தொடர்ந்து அழைத்து கொண்டே ஓடி ஒருநாள் செத்துமடிவது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியமாகித் தொலைக்கிறது. நாமும் சாத்தியபடுத்திக்கொள்வோம். நட்பால், அன்பால், நட்பு- உறவு பேனுவோம், நட்புறவு கொள்வோம்.
சகமனிதன் என்மீதான உங்களின் சகமனித அன்புக்கும், நட்புக்கும்
நன்றியும் வாழ்த்துக்களும்.
நன்றியும் வாழ்த்துக்களும்.
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!!!
Amazing ji... True lines... இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி ஜி, நல்வாழ்த்துகள்
DeleteAmazing ji... True lines... இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDelete