Tuesday, 19 September 2017

ஹிட்லரும் நீட்டும் ஜிமிக்கி கம்மலும்....


இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் சத்தமில்லாமல் லட்சக்கணக்கான யூதர்கள் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யபட்டு கொடூரமாக மனிதாபிமானமற்ற முறையில் ஹிட்லரின் நாசிப் படைகளால் படுகொலை செய்யபட்டார்கள். இதற்கு காரணம் ஹிட்லர் என்று வரலாறு சொல்கிறது. ஆனால் ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அந்த படுகொலைகளுக்கு வியன்னா கலை கல்லூரிதான் துவக்கமாக இருந்திருக்கிறது. 

ஹிட்லர் 
                    தன் தந்தையின் மரணத்திற்கு பின்னால் ஓவியம் மீது கொண்ட தீரா காதலாலும், தடுக்க இனி தகப்பன் இல்லை என்ற துணிவாலும் மீண்டும் ஒவியம் பயில நினைக்கிறார் ஹிட்லர். 
தன் தாயின் மீது மிகுந்த அன்பு கொண்ட ஹிட்லர் அவரிடம் சொல்லி புரிய வைத்து பணம் பெற்றுக்கொண்டு வியன்னா கலை கல்லூரிக்கு செல்கிறார். ஒவியம் பயில விண்ணப்பிக்கிறார். நிர்வாகம் ஹிட்லரை தேர்வு செய்ய தேர்வு ஒன்றை வைக்கிறது. பங்குகொள்கிறார் ஹிட்லர், துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவுகிறார். தோல்வி ஹிட்லரை கலக்கமுற செய்கிறது. 

தன் தாயிற்கு நிகராக ஓவியத்தை நேசித்தவர் ஹிட்லர். படிப்பில் துளியும் நாட்டமில்லாத ஹிட்லர் தந்தையின் வற்புருத்தலின் பேரிலே மேற்படிப்பை தொடர்ந்தார். தந்தையின் மரணம் அவருக்கிருந்த தடையை தகர்த்தியதாக அவர் நம்பியதாலும், ஓவியத்தின் மீதுள்ள ஈர்ப்பாலும் அவர் முறையாக ஓவியம் பயில விரும்புகிறார். இதுவெல்லாம்  நிர்வாகத்திற்கு தெரியுமா? அது ஹிட்லர் தோல்வியடைந்ததால் அவரது விண்ணப்பத்தை நிராகரிக்கிறது. சற்றும் துவண்டுபோகாத ஹிட்லர் மீண்டும் முயல்கிறார்,மீண்டும் விண்ணப்பிக்கிறார், மீண்டும் நிராகரிக்கப்படுகிறார். தொடர் தோல்வி ஏமாற்றத்தை உண்டுபண்ணுகிறது ஹிட்லரிடம். நிராகரிப்பு ஹிட்லரின் மனதை கடுமையாக பாதிக்கிறது.  தன்னால் இனி ஓவியமே பயில முடியாது என்ற முடிவிற்கு தன்னை தானே தள்ளிக் கொள்கிறார். தன் நாட்டத்தை மாற்றி, அவர் பயணத்தின் திசையை அரசியல் நோக்கி நகர்த்துகிறார். பிறகு நடந்தது உலகறிந்ததே! 

ஒருவேளை வியன்னா கலை கல்லூரியில் ஹிட்லர் தேர்ச்சிப் பெற்றிருந்தால், ஹிட்லரின் விண்ணப்பம் நிராகரிக்கபடாமல் அவருக்கு வாய்ப்பளிக்கபட்டிருந்தால், உலகமே ரசிக்க கூடிய, தலைசிறந்த ஓவியனாக கூட அவர் வந்திருக்க கூடும். ஆனால் வரலாறு அப்படி எழுதபடவில்லை. 

 ஆக லட்சக்கணக்கான யூதர்கள் கொடூரமாக கொல்லபட்டதற்கு வியன்னா கலை கல்லூரியும் காரணம். அந்த நிராகரிப்பும் காரணம். ‘அது எப்படி அந்த கல்லூரி காரணமாகும்? அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?’ என்கிறீர்களா? இருக்கிறது என்கிறது ஒரு கோட்பாடு. அதனை கேயாஸ் தியரி (chaos theory) என்கிறார்கள் ஆங்கிலத்தில். 

அதாகபட்டது எந்த ஒரு பெருநிகழ்விற்கும்  அதனோடு துளியும் தொடர்பில்லாத, சம்மந்தமில்லாத சிறு நிகழ்வு அந்த பெருநிகழவின் தொடக்கமாக இருக்கும். இந்த கோட்பாட்டினை 1963ல் எட்வர்ன் லோரென்ஷ் என்பவர் வண்ணத்துப் பூச்சியை கொண்டு விளக்கி காட்டினார். எட்வர்ன் சொல்கிறார் ‘ பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும் டெக்ஸாஸில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு' என்று. 

அது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா? இதனை அவர் கணித முறைபடியும், வானிலை மாற்றங்களின்படியும் சரியென்று நிருவிகாட்டினார். அவரது அந்த ஒழுங்கின்மை கோட்பாட்டிற்கு ‘வண்ணத்துப் பூச்சி விளைவு' (butterfly effect) என்றும் பெயர் வைத்தார். 
இப்போதும் நம்பமுடியவில்லையா? நான் ஏதோ ஆங்கில படத்தின் கதை சொல்வது போல தோன்றுகிறதா? தோன்றும். 

நாம் எதனையும் எதனோடும் தொடர்புபடுத்தி பார்ப்பதே கிடையாது. எல்லாம் நமக்கு வெறும் செய்தியே. விளைவு நாம் எல்லாவற்றையும் வெறும் செய்தியாகவே கடந்துபோகிறோம்.  அப்படி நாம் சமகாலத்தில் பார்த்த ஒரு பெருநிகழ்வும், அந்த பெருநிகழ்வு ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பால் சிதைந்து போனைதையும் இந்த கோட்பாட்டிற்கு விளக்கமாக சொல்ல விளைகிறேன், வாசியுங்கள். 

நீட் 

அன்று எல்லோரும் அந்த தீர்ப்பிற்காகத்தான் காத்திருந்தார்கள். அவளும் காத்திருந்தாள். 

அவள் ஒரு கூலித் தொழிலாளியின் மகள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் வளர்ந்தவள். கல்வி மட்டுமே விடியலை கொடுக்கும் என நம்பியிருந்தவள். மருத்துவராக வேண்டும் என்று தீர்கமான கனவு கண்டுவந்தவள். அவளுடைய எதிர்காலமே அந்த தீர்ப்பில்தான் இருந்தது. 

அன்று தீர்ப்பு வருகிறது. ‘நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் நிரப்பபட வேண்டும்' என்று. அந்த தீர்ப்பு கல்வியாளர்களுக்கும், சமூகநீதியை காக்க முயல்பவர்களுக்கும், பாதிக்கபட்டவர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. அவளுக்கும் அது பேரதிர்ச்சியாகவே இருக்கிறது. ஒரு தலைமுறையின் கனவை நெஞ்சில் சுமந்துகொண்டு டெல்லி வரை சென்று போராடியவள் அவள், நொருங்கிப் போகிறாள். என்ன செய்வதென்றே விளங்கவில்லை அவளுக்கு. தனக்காக, தன் குடும்பத்திற்காக, தன் நிலையிலிருந்து விடுதலையாவதற்காக கனவு கண்டவள். தான் இன்னவாக ஆக வேண்டும் என்று தீர்மானித்து உழைத்தவள். அதற்காக தன்னை தகுதிபடுத்திக் கொண்டவள். தற்போது தகுதியற்றவளாக நிற்கவைக்கபட்டிருக்கிறாள் இந்த அரசாங்கத்தால்.  உச்சநீதி மன்றம் வரை சென்றாகிவிட்டது வேறு என்னதான் செய்வது ஜனநாயகம் செத்துபோன இந்த ஜனநாயக நாட்டில்.இனி வேறு வழியே இல்லை என்று நினைத்துவிடுகிறாள், தன்னால் இனி மருத்துவமே பயில முடியாது,இனி தன்னால் மருத்துவராகவே முடியாது என்று முடிவெடுத்துவிடுகிறாள். தன் வாழ்வை முடித்துக் கொள்கிறாள். 

தகுதியுடைய ஒரு பெண்ணை தகுதியற்றவளாக்கி இந்த அரச இயந்திரம் வாழ தகுதியற்றவளாக தூக்கில் தொங்கவிட்டிருக்கிறது. இது எத்தனை பெரிய அரச பயங்கரவாதம். இது பயங்கரவாதம் என்று ஒரு மரணத்திற்கு பின்னால் தான் இந்த சீல்பிடித்த சமூகத்திற்கு உரைக்கிறது. 

இந்த மரணம்தான் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுக்கிறது. எல்லோரையும் குற்ற உணர்வுக்குள்ளாக்குகிறது. அதுவரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒலித்த வலுவான குரல்கள் இந்த சமூகத்தின் செவிட்டுச் செவிகளில் ஒலிக்க தொடங்குகிறது. எல்லோரும் வீதிக்கு வருகிறார்கள். சாதி, மதம், கல்வி என்று எந்த பேதமுமில்லை எவருக்கும். எல்லோரும் போராடுகிறார்கள். பெரிதாக எவருக்கும் எந்த சித்தாந்தமும் இல்லை. உணர்வின் உந்துதலில் கூடிய கூட்டமும் அது. 

தன்னெழுச்சியாக கூடிய பெருங்கூட்டம் அதிகார வர்கத்தின் உச்சி குடிமியை உலுக்கிப் பார்க்கிறது, அடி வயிற்றில் அமிலத்தை ஊற்றுகிறது. அரச இயந்திறந்துக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காக்கி உடையனிந்த குண்டர்களை ஏவி அடித்து, மிதித்து, மிரட்டி போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது, குரல்வளையை நசுக்க துடிக்கிறது. எதற்கும் அஞ்சா கூட்டம் கூடிக்கொண்டே போக, அதிகார வர்கம் திக்கு முக்காடி நிற்க பெரும் மாணவ புரட்சியாக, கல்வி புரட்சியாக இந்த போராட்டம் உருவெடுக்கும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஏன் நினைக்கமாட்டார்கள்? இது இலக்கை அடைந்தே தீரும் என்று தீர்கமாக நம்பியவர்கள் பலர், எதுவரையில் என்றால் இந்த பெரும் போராட்டத்திற்கு துளியும் தொடர்பில்லாத ஒரு வண்ணத்து பூச்சி தன் சிறகடிப்பின் சலசலப்பால் இந்த பெருங்கூட்டத்தை சிதறடிக்க துவங்கும் வரையில்...

ஜிமிக்கி கம்மல் 

கேரள மாநிலம் ஓணம் பண்டிகையை கொண்டாடி குதூகலித்துகொண்டிருக்கிறது. இந்த போராட்டத்திற்கும். கேரளத்திற்கும் எந்த தொடர்புமில்லை.அங்கு இந்த போராட்டம்  பெரிதாக எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. எல்லோரும் கொண்டாடி மகிழ்கிறார்கள். 

அந்த கல்லூரியும் கொண்டாடுகிறது. அந்த கல்லூரியின் ஆசிரியைகளும், மாணவிகளும் கொண்டாடுகிறார்கள், கொண்டாட்ட கழிப்பில் ஒருசேர ஒரு மலையாள பாடலுக்கு நடனமாடுகிறார்கள். அந்த நிகழ்வு காணொளியாக பதியப்படுகிறது, வலைத்தளத்தில் விளையாட்டாக பதிவேற்றவும்படுகிறது. பதிவேற்றிய சில நொடிகளில் அந்த காணொளியை யாரோ ஒருவர் பகிர, அதனை வேறாரோ ஒருவர் பகிர, பின் யார் யாரோ பகிர்கிறார்கள். இப்படியே பகிர்தல் தொடர அது தமிழகத்தையும் வந்து சேர்கிறது. காட்டுத்தீயாக போராட்டக் களத்திற்குள்ளும் பரவுகிறது. 

சித்தாந்தம் இல்லாமல் கூடிய கூட்டம் அந்த காணொளியை கண்டு சிலிர்த்து சிலாகித்து மெய் மறந்து போகிறது. கொண்ட நோக்கம் மறந்துபோகிறது. எந்த இணையம் இந்த போராட்டத்தால் அதிர்ந்துபோனதோ அதே இணையத்தில் இணைய போராளிகள் ஜிமிக்கி கம்மல் என்று ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த காணொளி வைரலாகிறது. எல்லோரும் பார்த்து பார்த்து ரசித்தார்கள். பகிர்ந்து பகிர்ந்து மகிழ்ந்தார்கள், சிலாகித்து செத்தார்கள் கூடவே போராட்டத்தின் நோக்கமும் சேர்த்து செத்தது. 

சிந்தாந்தமில்லாமல், தலைவன் இல்லாமல் தானாக சேர்ந்த கூட்டம் தானாகவே கலைந்து அந்த வண்ணத்து பூச்சியின் முகப்புத்தகத்தை தேடி ஓடி மொய்க்க தொடங்குகிறது. அரசுக்கு எந்த மெனக்கெடலும் இல்லாமலே போனது இந்த போராட்டத்தை ஒடுக்கவும், ஓங்கிய குரல்வளையை நசுக்கவும். 

ஒரு பெண்ணிற்காக வந்தார்கள் இன்னொரு பெண்ணை தேடிச் சென்றார்கள். அவ்வளவே இப் புரட்சி். வழக்கம்போல் அதே குரல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மீண்டும் கேட்பாரில்லை. 

அதிகார வர்கம் ஒடுக்க முடியாமல் தவித்த ஒரு போராட்டம். அங்கும் இங்குமாய் கூடிய கூட்டம். எந்த சிரத்தையும் இல்லாமல் சிதறியது. வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பெருநிகழ்வு அதற்கு துளியும் சம்பந்தமில்லாத, தொடர்பில்லாத ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பை பதிவு செய்து பதிவேற்றிய நொடியில், அது ஏற்படுத்திய சலசலப்பில் அங்கும் இங்குமாய் சிதற தொடங்குகிறது, சிதறிப்போகிறது. இதனை தான் ‘கேயாஸ் தியரி' என்று ஆங்கிலத்திலும் ‘விதி' என்று தமிழிலும் சொல்வார்கள். பாரதி கூட அழகாக பாடியிருப்பான்.

விதியே! விதியே! தமிழ்ச் சாதியை 
என் செயக் கருதி இருக்கின்றாயடா? 


No comments:

Post a Comment

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...