கெட்டியோலனே என்ட மல்லேக்கா....
வழக்கமாக மலையாளத் திரையுலகம் நிலமும் நிலம் சார்ந்த மனிதர்களும் மனிதர்களின் வாழ்வில் நிகழாமலிருக்கிற புரிதல்களும் பிரச்சனைகளும் சிக்கலகளும் குறித்தே இந்த படத்திலும் பேசியிருக்கிறது.
பெண்களின் உலகம் ஆண்களின் உலகத்திலிருந்து வேறுபட்டது. முற்றிலும் எதிரானது அல்ல மாறாக இவை இரண்டும் இணைந்து இயங்க வேண்டியது, இதுவே யதார்த்தம். ஆனால் யதார்த்தம் இப்படியிருக்க ஆண் உலகம் பெண் உலகத்தினை பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் அடக்கி ஆளவும் ஆட்டிப் படைக்கவும் தங்கள் தேவைக்கும்தான் பெண்கள் என்று கருதிக் கொண்டே பெண் உலகத்தை முற்றிலுமாக சுவீகரித்துக் கொள்கிற வேலையையே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செய்து வருகிறது. பலரது உரிமைக் குரலகளினாலும் காத்திரமான போராட்டங்களினாலும் இன்று சில அடிகள் நாம் முன்னேறியிருக்கிறோம், பெண்களின் உலகை புரிந்துக் கொள்ள முன் வந்திருக்கிறோம்,முயற்சிக்கிறோம். அப்படியான புரிதலை ஏற்படுத்த முயன்று வெற்றிப் பெற்றிருக்கிறது, கெட்டியோலனே என்ட மல்லேக்கா.
தன் அம்மாவையும் உறவுக்காரப் பெண்களையும் தாண்டி பெரிதாக பெண்களின் வாடையே படாத சிலிவாச்சன் தன் தாயின் உடல்நலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ரின்சியை மணமுடிக்கிறான். அவள் அருகாமையை அவனால் எதிர்கொள்ளவே முடிவதில்லை. அவளை நேர்கொண்டு பார்க்க கூட கண் கூசுகிறது. அவள் அருகினில் வந்தால் விலகி ஓடுகிறான். வீட்டிற்கே வரமால் காட்டிலும் மேட்டிலும் குடித்து விட்டு கிடக்கிறான். கட்டியவனை நினைத்து தினம் தினம் ஏங்குகிறாள் ரின்சி. வீட்டிலிருக்கிற அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறாள். அம்மாவை போன்றதொரு மாமியார். ஆனால் கனவன் ஏறெடுத்து கூட பார்க்காமல் தவிர்ப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் ரின்சி தவிக்க, ஒரு வார்த்தை அவனோட அன்பாக பேசமாட்டானா என்று ஏங்கி அவனிடமிருந்து அன்பையும் ஆதரவையும நட்பையும் எதிர்பார்த்து அவள் காத்திருக்கிறாள். சிலிவாச்சனோ தன் நண்பர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு தன் ஆண்மையால் ஆண் பலத்தால் அவளை வெல்ல ஓர் இரவில் கட்டிய்மணைவியான ரின்சியை கற்பளிக்கிறான்.
சிலிவாச்சனை போல இந்த நாட்டில் எத்தனை எத்தனை ஆண்கள் இருக்கிறார்கள். எல்லா வீட்டிலுமே சிலிவாச்சான்கள் பிறக்கிறார்கள், வளர்க்கப்படுகிறார்கள், வாழ்கிறார்கள். தன் காதலியின் விருப்பத்தையோ மனைவியின் விருப்பத்தையோ அறிந்துக் கொண்டா இங்கே ஆண் பெண் சேர்க்கை நிகழ்கிறது. பெரும்பாலும் ஆண்கள் பெண்களின் துணையை தேடுவதே அவர்களுக்கு ஆக்கி போட்டு, துணி துவைத்து இஸ்திரி போட்டு படுக்கையில் கிடந்துக் கொண்டு பிள்ளைகள் பெற்றுப் போடத்தானே.
ஒரு பெண் ஒரு ஆணிடம் என்ன எதிர்பார்கிறாள். ஒரு காதலி தன் காதலனிடம் எதை வேண்டுகிறாள், ஒரு மனைவி தன் கனவனிடம் எதை நம்பி வாழ தொடங்குகிறாள்? இந்த கேள்விகள் எதற்குமே ஆண் சமூகம் விடை தேட துணிவதில்லை. பெரும்பாலான ஆண்களின் பார்வைக்கு பெண் கூலி வாங்காத் தொழிலாளி, பிள்ளை பெற்றுப் போடுகிற இயந்திரம்.
சிலிவாச்சனின் தோட்டத்தில் வேலை செய்கிற வயதான பெண்ணொருத்தி சிலிவாச்சன் தன் மனைவியை கற்பழித்த கதை ஊர்முழுக்க பரவிய பிறகு அதை பற்றி பேசும் போது சொல்வாள் “ இந்த ஆம்பளைங்க எப்பவுமே அவங்கள பத்தி மட்டும்தான் யோசிப்பாங்க. ரெண்டு மூனு புள்ள பெத்துட்டேன் எப்படி பெத்தேன்னே நியாபகம் இல்ல.” என்று. பிரபஞ்சன் இப்படிச் சொல்லுவார் “ இந்திய சனத்தொகையில் பெரும்பான்மையோர் வன்புனர்ச்சியில் பிறந்தவர்கள் ஏனெனில், சகாவான பெண் சம்பந்தப்பட்டுத் தாயாவதில்லை, இந்தத் தேசத்தில் காதல் தொழிலில் சம்பங்கு ஆற்றல் பெண், காதலியாகக் கருதப் படலாமோ எனில் மாட்டாள். மாறாக, அவள் சுரண்டப்படும் மற்றுமொரு தொழிலாளியே ஆவாள்” என்று.
பெண்ணின் விருப்பமே இல்லாமல் அவள் விருப்பு வெறுப்புகளை கூட அறிந்துக் கொள்ளாமல் குறைந்தபட்சம் அவளோடு நட்பு கூட பாராட்டமல் அவள் உழைப்பை சுரண்டி தாலி கட்டிவிட்டோம் என்பதற்காக பெண்களை கற்பழிக்கிற கனவர்களின் கதை தான் இந்தப் படம். தான் செய்தது தவறு என்பது புரிந்தும் மன்னிப்பு கேட்க கூட துணியாத ஆண்டான்டு கால ஆணாதிக்க மனநிலையோடு தன் எதிரில் அமர்ந்து “அன்னிக்கு நடந்த்த பெருசா எடுத்துக்காத மறந்திடு” என்று மட்டும் சொல்ல முடிந்த சிலிவாச்சனிடம் ரின்சி கொந்தளிக்கிற காட்சியில் ரின்சியாக நடித்தவரின் கண்களை பார்க்க வேண்டுமே சுட்டு பொசுக்குகிறது. குற்றவுணர்வில் ஆழ்த்துகிறது. ரின்சியாக நடித்தவர் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார், கலங்கடிக்கிறார்.
சிலிவாச்சன் ஆண் உலகின் பொருக்கியெடுத்த ஒரு பானைக்கு ஒரு சோற்றுப் பதமாகவே காட்சிக்கு காட்சி வருகிறார். தன்னை சுற்றியிருக்கிற எல்லோரையும் ஏன் ஆட்டையும் மாட்டையும் கூட நேசித்து பாதுக்காக்கிற ஆணாக இருந்தாலும் மனைவியை கண்டால் ஓடி ஒளிந்துக் கொள்கிற ஒவ்வொரு காட்சியிலும் சராசரி ஆணாகவே வாழ்ந்திருக்கிறார். ரின்சியின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிற இடங்களில் அத்தனை யதார்த்தம் அவர் நடிப்பில்.
தன் மனைவிக்கு தன்னிடமிருந்து என்ன தேவைப்படுகிறது. அவள் எதை எதிர்பார்க்கிறாள் என்று புரியாமல் குழம்பி தன் தோட்டத்தில் வேலை செய்கிற கூலித் தொழிலாளியான கோபி சேட்டனிடம் ஆற்றங்கரையில் அமர்ந்து வாழ்க்கை பாடம் படிக்கிற இடம், தரிசனம்.
அந்த தரிசனத்துக்கு சிலிவாச்சன் முகம் கொடுத்தானா? இல்லையா? ரின்சி அவனை மன்னித்தாளா இல்லையா? சிலிவாச்சன் ரின்சி வாழ்க்கை என்ன ஆனது? அதுவே கெட்டியோலனே என்ட மல்லாக்க திரைப்படம்.
சத்தமில்லாமல் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நிகழ்கிற வன்புனர்வை பேசு பொருளாக்கி, வழக்காமாக மலையாளத் திரைபடங்களில் வருகிற நிலமும் நிலம் சார்ந்த மனிதர்களிடம் அந்த பிரச்சனையை கொண்டு சென்று அதனை ஊர் முழுக்க பரவ விட்டு ஊரார் ஒவ்வொருவரின் பார்வையையும் பதியவைத்திருக்கிறார் இயக்குனர்.
இந்த சமூகம் பெண்ணை என்னவாக பார்க்கிறது என்னவாக நடத்துகிறது என்று தெளிவாக பதியவைத்ததோடு அல்லாமல் பெண்ணுக்கு ஒரு ஆணிடமிருந்து என்ன தேவை என்பதையும் உணர வைத்திருப்பதில் இந்த படம் வெற்றிப் பெற்றிருக்கிறது.
No comments:
Post a Comment