ஆதம்பாக்கத்தில் வீடு பார்க்க நண்பனோடு அலைந்துக் கொண்டிருந்தேன். டு லெட் போர்ட் மாட்டியிருந்த அத்தனை வீடுகளிலும் விசாரித்தோம், வாய்த்த அத்தனை உரையாடல்களும் ஸ்வாரஸ்யமானவை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒரு பெண்மணியிடம் நண்பன் நிகழ்த்திய உரையாடல் மிக ஸ்வாரஸ்யமானது.
"வீடு யாருக்கு?"
"எங்களுக்கு"
"பேச்சிலரா? பேமிலியா?"
"பேச்சிலர்"
"எத்தனை பேர் இருப்பிங்க?"
"மூணு பேர்"
"என்ன பண்றிங்க?"
" மூணு பேரும் சிவில் இன்ஜினியர்"
"மூணு பேரும் இந்துவா?"
"ஆமா"
"நாங்க கிறிஸ்டியன், முஸ்லிமுக்கு வீடு குடுக்க மாட்டோம். இந்துக்கு மட்டும் தான் வீடு. நீங்க வீட்ல அசைவம் சமைப்பிங்களா?"
"இல்ல"
"ஹோட்டல்லருந்து வாங்கிட்டு வந்து சாப்பிடுவிங்களா?"
" இல்ல"
" மூணு பேரும் அசைவம் சாப்பிடமாட்டிங்கதானே"
நண்பன் சற்றுத் தயங்கி திரு திருவென விழித்தான்.
" நாங்க பூஜை புனஸ்காரம்னு ஆச்சாரமா இருப்போம். உங்களுக்கு தொந்தரவா இருக்கும். நீங்க வேற வீடு பாத்துக்கங்களேன்"
யார் இந்த மண்ணில் இந்துக்கள்? கிறிஸ்தவரல்லாத இஸ்லாமியரல்லாத ஏனையோரை இந்துக்கள் என்கிற பட்டியலுக்குள் ஆங்கிலேயன் திணித்தான், அவன் வசதிக்காக. ஆனால் அதன் பின்னால் நடைமுறையில் இந்துக்கள் என தங்களைத் தாங்களே கருதிக்கொண்டு வாழ்க்கையை நடத்துபவர்கள் உள்ளபடியே இந்துக்கள் தானா?
இந்தக் கேள்வியோடு புறமுதுகிட்டு நண்பன் திரும்பி வந்தான். இன்றைக்கான வீடு தேடும் படலம் இனிதே நிறைவுற்றது. நாளை என்ன ஸ்வாரஸ்யம் ஒளிந்திருக்கிறதென பார்ப்போம்.....
No comments:
Post a Comment