Wednesday, 19 June 2019

பார்பி டால்


எதிர்வீ்ட்டு விஷ்வா ஒரு பார்பி டால் வைத்திருப்பான். தங்க நிற தலை மயிர், கச்சிதமான புருவங்கள், பார்த்து பார்த்து வரையப்பட்ட கண்கள், கீரைத்தண்டு போன்ற மெல்லிசான கழுத்து, பிங் வர்ண உடை, இடுப்புக்குக் கீழே அது குடை போல விரிந்திருக்கும், அதில் நேர்த்தியான வேலைப்பாடுகள் என்று அந்த பொம்மை வசீகரிக்கும், அந்த பொம்மை என்றால் நான்சிக்கு கொள்ளை இஷ்டம். எவ்வளவு கெஞ்சி கேட்டாலும் விஷ்வா அவளுக்கு அந்த பொம்மையை விளையாடக் கூட தரமாட்டான்.
ஒருமுறை அப்பா வின்சென்டிடம் கேட்டாள், அவனும் வாங்கிக் கொடுத்தான், ஆனால் அது பார்பி டாலில்லை. அதன் தலைமயிர் கூட தங்க நிறத்தில் இல்லை, அது வேறு ஏதோவொரு பொம்மை நான்சி பிடிவாதக்காரி. அவள் அந்த பொம்மையை தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. விஷ்வா வைத்திருப்பது போன்ற பார்பி டால் தான் வேண்டும் என்று தினம் அடம்பிடிப்பாள். ஏனோ வின்சென்டால்  அது போன்ற ஒரு பொம்மையை வாங்கித் தரவே முடிந்ததில்லை. இன்று வாங்கித் தருகிறேன், நாளை வாங்கித்தருகிறேன் என்று சொல்லி சொல்லியே சமாளித்து வந்தான், இவன் வாங்கியே தரமாட்டான் என்று முடிவெடுத்ததாலோ என்னவோ விஷ்வாவின் பொம்மையை பிடுங்கிக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்துவிட  முயல, நான்சியும், விஷ்வாவும் மல்லுக்கட்ட,  திடீரென்று அவள் மயங்கி விழுந்து விழுந்தாள். எல்லோரும் பதறியடித்து ஓடி வந்தார்கள். வின்சென்டும், வின்சென்டின் வயதான அப்பாவும் அவளைத் தூக்கிக் கொண்டு ஓடி மருத்துவமனையில் சேர்த்தார்கள். இப்போது நான்சி தீவிர சிகிச்சைப் பிரிவில்.

நான்சி, வின்சென்டிற்கு ஒரே மகள், கட்டிய மனைவி விட்டுச் சென்ற பின்னால் இல்லற வாழ்வின் எஞ்சியுள்ள ஒரே பந்தமாக நான்சி மட்டுமே உடன் இருக்கிறாள். நான்சிக்கு ஏழு வயதுதான். அந்த வயதில் எந்த குழந்தைக்கும் வரக்கூடாத நோய் அவளுக்கு, இரத்தத்தில் புற்று நோய் ஏதேதோ வைத்தியம் தொடர்ந்து பார்த்தாகிவிட்டது. வைத்தியமெல்லாம் நோயைத் தின்றதா, கொன்றதா தெரியவில்லை. ஆனால் அது நான்சியின் அழகைத் தின்றிருந்தது. துரு துருவென சுற்றித்திரிந்த அவள் சுறுசுறுப்பை மொத்தமாக தின்று தீர்த்திருந்தது. நான்சியின் தலைமுடியை விரல்களால் கோதி, கன்னத்தைக் கிள்ளி முத்தங் கொஞ்சிக் கொண்டே இருக்கலாம். ஆனால் பாவம், கடுமையான சிகிச்சைகள் அவள் தலைமயிரையும், உடலையும் அழகையும் கொஞ்சம் கொஞ்சமாக தின்று ஏப்பம் விட்டிருந்தது. அத்தனை அழகானவள், எல்லோருக்கும், பிரியமானவள் இப்போது பரிதாபத்திற்குரியவளாக படுக்கையில் கிடக்கிறாள் தீவிர சிகிச்சைப் பிரிவில்.

தீவிர சிகிச்சைப் பிரிவினுள்ளே யாருக்கும் அனுமதியில்லை. செவிலியர்களுக்கும், மருத்துவா்களுக்கும் மட்டுமே அனுமதி, யாராவது ஒருவா் வேண்டுமானால் போய் பார்த்துவிட்டு வரலாம். அங்கேயே உடனிருக்க முடியாது. வின்சென்டும் அவனது அப்பாவும் வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில்தான் அமர்ந்திருந்தார்கள். இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. நெடுநேரமாக மௌனமே மய்யம் கொண்டிருந்தது இருவருக்கும் மத்தியில். பல மணி நேரங்களுக்குப் பின்னே வின்சென்ட்தான்  மௌனத்தை உடைத்தான்.
“எப்படிப்பா இந்த பச்ச புள்ளைய விட்டுட்டு போக அவளுக்கு மனசு வந்தது. அவ்ளோ கல் நெஞ்சக் காரியா இருப்பான்னு நினைச்சு கூட பாக்கலப்பா. இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டாளேப்பா” என்று கண்கலங்கி கனத்தக் குரலில் பேசினான்.
அவா் எதுவுமே பேசவில்லை, அவன் கைகளை மட்டும் இறுகப் பற்றிக் கொண்டார். அவன் கண்களைத் துடைத்துக் கொண்டான். அப்போதைக்கு அது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. தன் வாழ்வில் இதுபோல பல நிகழ்வுகளைக் கண்கூட பார்த்திருப்பார் அந்த பெரியவா் அதன் சாட்சியாகவும் கூட அவா் வாழ்ந்து கொண்டிருப்பார். அதிகமாகவெல்லாம் அவா் வின்சென்டிடம் எதுவும் சொல்லவில்லை. ஆறுதலுக்காக மட்டும் சொன்னார். “போறவங்க எப்பவும் பாதியில போயிடறாங்க, ஆனா போராடுற நாம போராடித்தான் தீரணும், போராடித்தான் தீரணும்”.
காலம் மனிதர்களைக் கனிய வைக்கிறது. மனித வாழ்வே ஒரு போராட்டம் தானே. என்ன ஒன்னு அது முடிவேயில்லாத போராட்டம். யாராலும் அந்த போராட்டத்தில் வெற்றிப் பெற முடியாது. போராட மட்டும்தான் முடியும். போராடித் தீர்ந்து போகத்தான் முடியும்.
அந்த தீவிர சிகிச்சைப் பிரிவின் முகப்பில் ஒரு கண்ணாடிக் கதவு இருக்கும். அந்த கதவு மருத்துவர்கள் செல்வதற்கும், செவிலியர்கள் செல்வதற்கு மட்டும் தான் தடையின்றித் திறக்கப்படும். மற்றவா்களுக்கு எப்போதாவது தேவையிருந்தால் மட்டும். அந்த கண்ணாடிக் கதவினுள்ளே என்ன நடந்தாலும் வெளியே தெரியாது.
வின்சென்ட் அதன் வழியாக முயன்று பார்த்தான். நான்சியின் படுக்கை அவன் கண்களுக்குத் தென்படவேயில்லை. எட்டி எட்டிப் பார்த்தான் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் இயன்றவரை முயன்று பார்த்தான். வயதான அவனது அப்பா அமர்ந்தயிடம் விட்டு நகரவேயில்லை. இப்போது ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அமைதியாக பிரார்த்தனைச் செய்து  கொண்டிருக்கிறார். எதன் மீதும் நம்பிக்கையற்ற தருணங்களில் மனிதர்களுக்கு, கடவுள்கள் குறைந்தபட்ச நம்பிக்கையை தருவதற்காக வேணும் பயன்படுவது  ஆறுதல்.
“நீங்கதான் நான்சி அப்பாவா” செவிலியின் குரல் கேட்டு ஆமாம் என்பது போல திரும்பிப் பார்த்து தலையசைத்தான் வின்சென்ட்.
“டாக்டா் கூப்பிடறாரு” வின்சென்ட் தகப்பனைத் திரும்பிப் பார்க்க, அவா் போய் வரச் சொல்வது போல சமிஞ்ஞை செய்தார் அவன் அந்த செவிலியரின் பின்னால் நடக்கத் துவங்கினான். பெரியவர் கண் மூடி மீண்டும் பிரார்த்திக்க தொடங்கியிருந்தார்.
நான்சியின் அறைக்கதவு திறக்கிறது. படுக்கையிலிருந்த நான்சி அந்த கதவின் பக்கம் திரும்பினாள். கதவைத் திறந்து உள்ளே வருவது அவள் அம்மா. கண்ட நொடியில் அத்தனை மகிழ்ச்சி நான்சிக்கு, எத்தனை வருடத்திற்கு முன்னால் போனவள். இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறாள். நான்சியை அந்த நிலையில் பார்த்ததும் அவள் கண் கலங்குகிறது. அவள் நான்சி படுத்திருக்கும் மெத்தையின் ஒரு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். வைத்தக் கண் வாங்காமல் நான்சியையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். எதுவுமே பேசவில்லை.
நான்சிதான் முதலில் பேசினாள். “எங்கம்மா போன”
அவள் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. மாறாக அவள் வேறொன்று கேட்டாள்.
“அம்மா  கூட வந்துருடா”
எந்த பிள்ளைக்குத்தான் அம்மாவோடு இருக்கப் பிடிக்காது. அவள் கேட்ட உடனே நான்சிக்கு அவளோடு போய்விட வேண்டும் என்பது போலிருந்தது. ஆனால் அவள் “மாட்டேன்” என்றாள்.
“அம்மாவ பிடிக்கலையா?”
“பிடிக்கும் ஆனா அப்பாவுக்கு நான் மட்டும் தானே இருக்கேன். நான் உன் கூட வந்துட்டா அப்பா பாவம்ல, நீ தான் அப்பாவ விட்டுட்டு போயிட்ட” நான்சியை சமாளிப்பதற்காக கூட  அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“அம்மாவுக்கும் யாரும் இல்லடா அப்பாவுக்குத் தாத்தா இருக்காரு எனக்கு யாருமே இல்ல. நீ என் கூட வந்துடேன்”
நான்சி பிடிவாதமாகவே இருந்தாள். எப்படி அவளை சரிகட்டி கூட்டிப் போவதென்றே அவளுக்குத் தெரியவில்லை, பிறகு யோசித்து தயங்கித் தயங்கி சொன்னாள்.
“அப்பா பாவம்லம்மா, அப்பா உன்னால ரொம்ப கஷ்டபடறாரு. நீ என் கூட வந்திடு அப்பா சந்தோஷமா இருக்கட்டும், நான் உன்ன நல்லா பார்த்துப்பேன். எது கேட்டாலும் வாங்கித் தருவேன் அம்மா கூட வந்திருடா” அவள் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
நான்சி அமைதியாக யோசித்தாள். பிறகு கேட்டாள் “என்ன கேட்டாலும் வாங்கித் தருவியா?”
அவள் ஆமோதித்தாள். “விஷ்வா ஒரு பார்பி டால் வெச்சிருக்கான். அழகா இருக்கும் எனக்கு அவன் தரவே மாட்டான் எனக்கும் அது மாதிரி ஒரு டால் வேணும் நீ வாங்கித்தருவியா  நான் உன் கூட வந்தா”
“அதே மாதிரி பார்பிடால் தானே. நான் வாங்கித்தரேன், உன் மேல ப்ராமிஸ், அம்மா கூட வா?”
நான்சி “நோ….நோ...காட் பிராமிஸ்” என்று கை நீட்ட, அவள் கரம் பற்றி சத்தியம் செய்து அழைத்துப் போக அவள் முயல்கையில் வெடுக்கென கையை எடுத்து கொண்டாள். அது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நான்சி அவளை நம்பவில்லை. அவளும் வின்சென்டை போலவே ஏமாற்றிவிடுவாள் என நினைத்தாள். “இல்ல நீயும் அப்பா மாதிரியே ஏமாத்திருவ. அப்பா டெய்லி ப்ராமிஸ் பண்ணுவாரு ஆனா வாங்கித் தரமாட்டாரு. நீயும் என்ன ஏமாத்திடுவ” என்றாள். என்ன சொல்லி  நான்சியை அழைத்துப்போக? எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள்.
முடிவாக நான்சி சொன்னாள். “எனக்கு பார்பி டால் வாங்கிட்டு வா நான் உன் கூட வரேன்”என்று சொல்லி முகத்தை எதிர்பக்கம் திருப்பிக் கொண்டாள். கோவமாக இருப்பதுபோல பாசாங்கு செய்தாள். வேறு  வழியில்லை என்பது புரிந்தது. தாய் அதற்க்கு சரி என்பது போல் தலையாட்டி அங்கிருந்து அவசர அவசரமாக வெளியே சென்றாள்.

மருத்துவரின் அறைக்கதவு திறக்கப்படுகிறது. உள்ளிருந்து வின்செண்ட் வெளியே வருகிறான். அவன் முகம் முழுவதும் கலவரப்பட்டுக் கிடந்தது. மருத்துவா் என்ன சொன்னாரோ தெரியவில்லை. அவன் நடைப் பிணமாகவே வெளியே வந்தான். நடைப் பிணமாகவே நடந்தான். அவனை அங்கு அழைத்து சென்ற செவிலிப் பெண்ணும் அவனுடனே வந்தாள்.
அதே இருக்கையில் ஏதோ ஜெபித்த படியே அவன் அப்பா அமர்ந்திருந்தார். வின்சென்ட் வருவதைப் பார்த்த அவா் ஜெபிப்பதை நிறுத்தி, இருக்கையிலிருந்து எழுந்து எதிர்பார்ப்போடு அவனைப் பார்த்தார். அவன் உடைந்துப் போயிருப்பதை அவனை அருகில் பார்த்த கணமே புரிந்துக் கொண்டார். அவன் அப்பனைப் பார்த்துக் கை விரித்தான். அவா் கண்கள் கண்ணீா் ததும்ப உருளுகிறது. வின்சென்ட் கூட்டிச் சென்ற செவிலிப் பெண் அந்த கண்ணாடிக் கதவை திறந்தாள். இருவரும் உள்ளே சென்றார்கள்.

நீளமான படுக்கை நல்ல அகலமாகவும் இருந்தது. அதன் மத்தியில் நான்சி படுத்திருந்தாள். பிஞ்சு கைகளில் ஊசி குத்தி சொட்டுச் சொட்டாக மருந்தேறிக் கொண்டிருந்தது. மூக்கில் ஒரு சின்ன ரப்பா் ட்யூப் செயற்கையாக சுவாசம் தந்து கொண்டிருந்தது. அவனுக்குப் பெயா் தெரியாத ஏதேதோ இயந்திரங்கள் விசித்திரமாகத் தொடா்ந்து வேலை செய்து கொண்டிருந்தது. அவன் நான்சியின் பக்கத்திலிருந்து நாற்காலியில் அமர்ந்தான். பெரியவா் பேத்தியைப் பார்த்தபடியே கண் கலங்கி நின்றிருந்தார். வின்சென்ட் அவள் கைகளைப் பற்றி, மெல்ல தன் விரல்களால் அவள் விரல்களை வருடினான். சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சி சிறகடிக்க முயல்வது போல அவள் மெல்ல கண் விழித்தாள். யாரோ இருவா் அவள் அருகில் இருப்பதாக முதலில் மங்கலாகத் தெரிந்தது நான்சிக்கு. பிறகு நிதானத்திற்கு வந்தாள். அருகிலிருப்பது தகப்பனும் தாத்தனும் என்று தெரிந்ததும் இருவரைப் பார்த்தும் புன்னகைத்தாள். பாவம் அவர்களுக்குத் தான் துயரத்தை மறைத்து பொய்யாகக் கூடப் புன்னகைக்க முடியவில்லை. இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் அழுகையாக வருகிறது. எங்கே பேசினால் அழுதுவிடுவோமோ என்கிற பயத்தில் இருவரும் அமைதியாகவே நான்சியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அப்பா…… அவள் மெல்லமாக “சாரிப்பா. . . .” என்றாள்.
எதற்கு  இவள் மன்னிப்பு கேட்கிறாள். புரியவில்லை அவனுக்கு “ஏண்டா”
“என்னால தானே நீ கஷ்ப்படற?” மீண்டும் “சாரிப்பா” அவன் உடைந்து அழுகிறான், அவள் கை விரல்களை பிடித்துக் கொண்டு. கண்களில் கண்ணீா் அவனை மீறி வழிகிறது. பின்னாலிருந்து அவன் அப்பன் வின்சென்டின் தோள்களை அழுத்துகிறான். பிள்ளையின் முன்னால் அழுகிற மகனை அவா் தடுக்க முயல்கிறார். என்ன புரியும் அவளுக்கு மரணப் படுக்கையில் போராடிக் கொண்டிருப்பவள் உடைந்து போய் விடமாட்டாளா பெத்தவன் கண் கலங்குவதை பார்த்தால். அதனால் தான் அவனது அழுகையை அவா் தடுக்க நினைத்தார்.
“அப்டிலாம் இல்லடா, யாரு சொன்னா உனக்கு?”
“அம்மாதான்ப்பா….” திடுக்கிட்டு திரும்பிப் பார்க்கிறான். தாத்தாவும் பேத்தியின் மீது அதிர்ச்சி கலந்த பார்வையை வைத்தார்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே என்ன சொல்கிறாள் நான்சி என்பது விளங்காமல் இருந்தார்கள்.
“அம்மாவா?. . . . . எப்ப பார்த்த. எங்க பார்த்த?” அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருந்தது
அவனுக்கு.

ஏன் இருக்காது? அவள் இறந்து மூன்று வருடமாகிறது. அவளுக்குக் கூட புற்றுநோய் தான் ஆனால், அவள் அதனால் சாகவில்லை. தன்னைத் தானே மாய்த்துக் கொண்டாள். சிகிச்சை தந்த வலியோ, பயமோ அல்ல அவள் அந்த முடிவை தேடியதற்கு, அவள் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போதே அவள் பெற்ற மகளுக்கும், அவளுக்கு வந்த அதே நோயிருப்பது தெரிந்தது. என்ன நினைத்திருக்கும் பெற்ற மனம் தன்னால் தான் தன் பிள்ளைக்கும் இந்த நிலை என்ற குற்ற உணர்வு ஒருபக்கம். மறுபக்கம் குடும்பமோ நடுத்தரக் குடும்பம். இருவருக்கும் வந்திருப்பதோ பணக்கார வியாதி. யாரை காக்க ஓடுவான் கணவன், ஒரே யோசனை. வாழ்ந்த தன்னை விட வாழ வேண்டியவள் மகள்தான் என தோன்றியது. பெற்றவளுக்கு வேறெப்படி தோன்றும் உயிரை கொடுத்தவளுக்கு அந்த உயிரைக் காப்பாற்ற தன்னுயிரை தருவது என்ன பெருங் கஷ்டமா? தன்னை தானே மாய்த்துக் கொண்டாள்.
“அம்மாதான்ப்பா….. இப்பதான்… எனக்கு பார்பிடால் வாங்க போயிருக்கா” நிச்சயமாக இது கனவுதான். நான்சி கனவுதான் கண்டிருக்கிறாள் என்று அவனுக்குப் பட்டது.
“நான் உன்ன கஷ்டப்படுத்துறனாப்பா…” அவள் சன்னமான குரலில் கேட்டாள்.
“இல்லடா. . . . அப்பாவுக்கு நீதான் எல்லாம். நீ எப்டிடா எனக்கு கஷ்டமா இருப்ப” வின்சென்டிற்கு மகள் அப்படி கேட்டதுதான் எல்லாத்தை விடவும் கஷ்டமாகவே இருந்தது.
நான்சி நம்பியதாக தோன்றவில்லை. பொய் “சொல்லாதப்பா…..” 
அவன் பேச்சை நிறுத்தினான். பின் தொடர்ந்தாள்.
“நான் அம்மா கூட போகவா?” தூக்கி வாரி போட்டது அவனுக்கு
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். அப்பா கூட தான் நீ எப்பவும் இருக்கணும்” தி்ட்டவட்டமாக சொன்னான்.
அவள் பிடிவாதக்காரி பிடிவாதமாக இருந்தாள். “முடியாது நான் போவேன் நான் அம்மா கூட போறேன். . .”
மூச்சிரைக்கிறது. நான்சிக்கு ஏதோ விபரீதமாவதை வின்சென்ட் உணர்கிறான். டாக்டா். . . அவன் கத்துவது அந்த அறையை தாண்டியும் கேட்டது. விரைந்தோடி வந்தார் மருத்துவா். அவனையும் பெரியவரையும் அங்கிருந்து வெளியேற்றினார்கள். முரண்டு பிடிக்கிறான் வின்சென்ட் வலுக்கட்டாயமாக அவனை வெளியேற்றுகிறார்கள். மீண்டும் அந்த கண்ணாடி கதவிற்கு வெளியே இருவரும். உள்ளே மருத்துவரும் செவிலியர்கள் சூழ நான்சிக்கு சிகிச்சை நடக்கிறது பரபரப்பாக.
அப்போது அந்த அறைக்குள் வருகிறாள் தாய். அத்தனை களேபரத்திலும் நான்சி அவளை எப்படியோ கண்டுவிட்டாள். அம்மா எதிரில் நிற்கிறாள். அவள் முதுகிற்குப் பின்னால் எதையோ மறைத்து வைத்திருக்கிறாள். என்னவாக இருக்கும்? நான்சி எட்டிப் பார்க்கிறாள். அவள் முதுகிற்குப் பின்னால் ஒரு பொம்மை அந்த பொம்மை….அதே பொம்மை…… எதிர்வீட்டு விஷ்வா வைத்திருப்பதை போலவே தலைமயிர் கூட அதே தங்க நிறத்தில் அவ்வளவுதான் துள்ளி குதித்தோடி அன்னையின் முன் நிற்கிறாள். கொடுக்காமல் அவளும் போக்குக் காட்டுகிறாள் எப்படியோ அந்த பொம்மையை அவளிடமிருந்து வாங்கினாள். பொம்மையை பார்க்கிறாள். அதே பொம்மை தான் பெத்தவளைப் பார்க்கிறாள். அவளை கட்டி அணைக்கிறாள். பின் அவள் கைபிடித்து அவளுடனே நடந்து போனாள் அவா்கள் இருவரும் சென்றதை அங்கிருந்த யாருமே பார்க்கவில்லை. . . .

2019 பிப்ரவரி மாத பேசும் புதிய சக்தி இதழில் வெளியானது.

1 comment:

  1. Casino Player Reviews | jtmhub.com
    Casino Player Reviews. Casino Player has a variety 안동 출장안마 of games 나주 출장안마 such as the roulette 광양 출장마사지 games, the blackjack, and roulette 아산 출장샵 games. Casino 보령 출장샵 Player has been rated highly by

    ReplyDelete

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...