Friday, 2 August 2019

ராமனின் சவரக்கத்தி

இரண்டு நாட்களுக்கு முன்பு புழுதிவாக்கத்திலுள்ள சலூனில் முடிவெட்டுவதற்காக சென்றேன். வேளச்சேரியையும் தில்லை நகர் சப்வேவையும் இணைக்கிற சாலையில் பிரம்மாண்டமாக எழுந்து பாதியில் கைவிடப்பட்ட இரயில் பாலத்தின் நிழலில் சாலையோரத்தில் இருந்தது அந்த சலூன். முழுவதும் குளிரூட்டப்பட்ட அறை, ஆட்கள் யாருமில்லாமல் முடித்திருத்துபவர் மட்டுமே இருந்தார். உள்ளே சென்றதும் இருக்கையில் அமரச்செய்தார். முடித்திருத்துபவர்; ஒரு வடமாநிலத்தவர்.  
முடித்திருத்தும்போதே மெல்ல அவரிடம்  பேச்சுக் கொடுக்க தொடங்கினேன். பேச்சின் தொடக்கத்திலேயே மனிதர் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. உடனே அவரிடம் பேச்சை குறைத்து கேள்விகளாக தொடுத்தேன்.

"யோகி ஆதித்யநாத் தானே உங்களுடைய முதலமைச்சர்?"

ஆமாம் என்று தலையசைத்தார்.

" உங்க முதலமைச்சர் எப்படி?"

"அச்சா சார்" என்றார். அதைகேட்டு நான் விழித்தபோது அவரே தொடர்ந்தார் " நல்ல மனுஷன் சார், சரியா வேலை செய்றார்"

எனக்கு ஆத்திரமும், கோவமும் முட்டிக் கொண்டு வந்தது. அன்று காலையிலிருந்து வந்துக் கொண்டிருந்த செய்திகள் மனதை பதபதைத்துக் கொண்டிருந்தது. ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் இங்கு வதைப்படபோகிறது என்றெல்லாம் சிந்தித்த காரணத்ததால் மனம் பீதியடைந்திருந்தது.

இந்த பயம் பீதி இவற்றினூடாகவே இவற்றிற்கெல்லாம் காரணமான இந்த இந்து மதவெறியர்களை  இந்த மனிதர்கள் எப்படி ஆதரிக்கிறார்கள், எப்படி கொண்டாடுகிறார்கள்? இதே கேள்விதான் என் மனதில். இந்த கேள்விகளையெல்லாம் யாரிடனமேனும் கேட்டுவிட வேண்டும் என்று கூட துடித்துக் கொண்டிருந்தேன். மனதில் தேக்கி வைத்திருந்த கேள்விகளையெல்லாம் கேட்டுவிட சரியான ஆள்தான் சிக்கியிருந்தார். நான் கேள்விகளை மீண்டும் தொடுத்தேன்.

"இன்னிக்கு காலையில பதினாறு வயசு இஸ்லாமிய பையன ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி, அந்த பையன் சொல்லலைன்னதும் அந்த பையன உயிரோட எரிச்சு கொன்னிருக்காங்க. தெரியுமா?"

"இல்லை" என்றார்.

"நீங்க, சரியா வேலை செய்றவர்,  சி.எம், நல்ல மனிதர்னு சொன்ன ஆதித்யநாத் ஸ்டேட்ல தான் இந்த மாதிரி கொலைகள் தொடர்ந்து நடக்குது. எப்படி நீங்க நம்பறிங்க இவங்கள? எப்படி நல்லவங்கன்னு சொல்றிங்க?"

ஆத்திரத்தோட எழுந்த என் கேள்விகளுக்கு அவரிடமிருந்து பதிலில்லை. மௌனமாக ஒரு இயந்திரத்தை போல அவர் மாறியிருந்தார். நறுக்கிய என் முடிகளை, சுத்தம் செய்து, பின்னர் தாடியை வழிப்பதற்கு கத்தியில் பிளேடை அவர் நுழைத்துக் கொண்டிருந்தபோது நான் மீண்டும் கேட்டேன்.

"உங்க சி.எம் ஆதித்யநாத் நல்ல மனுஷனா"

இப்போதும் ஆமாம் என்றே பதில் வந்தது. நான் வாயடைத்துப் போயிருந்தேன். இப்படியான மனிதர்கள் இருக்கிற வரையில் மனிதர்களை வேட்டையாடுகிற  சாதி மத வெறி பிடித்த மனித மிருகங்கள் இருக்கத்தான் போகின்றன என்றெல்லாம் எனக்குள்ளாக நினைத்துக் கொண்டேன், எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சவரக்கத்தியில் பிளேடை மாட்டிய அந்த மனிதர். குவளையில் சவரம் செய்ய பயன்படுத்துகிற சோப்பின் நுரையை எடுத்துக் கொண்டு அருகில் வந்தார். இப்போது அவரிடம் கேட்பதற்கென்று என்னிடம் ஒரு கேள்வி தயாராயிருந்தது.

"உங்க பேர் என்ன?"

மனிதர் என் தாடையிலும் கழுத்திலும் நுரையினை தடவிக் கொண்டே " கிருஷ்ணா" என்று தன் பெயரை சொல்லியபடி என் கழுத்தில் சவரக் கத்தியை வைத்தார். அதற்கு பிறகு அவரிடம் நான் கேட்க எந்தவொரு கேள்வியும் இருப்பதாக  நினைக்கவில்லை.

No comments:

Post a Comment

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...