அவனவனுக்கு மணமுடிக்க பெண்ணே கிடைக்க வில்லையென்று
குறிகளை மறைத்துக் கொண்டு அல்லாடுகிறான்
90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணமே ஆகாதென்று
சிலர் பகடி செய்துக் கொண்டிருக்கிறார்கள்
நான், அவளைப் புணர்வதற்கு இடம் தேடித் திரிகிறேன்
தெருக்கள்தோறும் சாலைகள்தோறும்
அவளை இழுத்துக் கொண்டே திரிகிறேன்
எல்லா வீடுகளின் சன்னல்களும்
எல்லா வீட்டு கதவுகளும்
அடைத்தே இருக்கின்றன
அடைக்கப்பட்ட சன்னல்களைப் பாரத்துக் கொண்டும்
தாழிடப்பட்ட கதவுகளை கடந்துக் கொண்டும்
நான் மண்டைச் சூடேறி நடக்கிறேன்
எல்லா சன்னல்களுக்கு உள்ளிருந்தும்
ஒற்றை முனகல் சத்தம்
தடித்த ஆண் குரல்வளைகளிலிருந்து எழும் முனகல் சத்தம்
பெண்களின் குரல்கள்? அது காணவில்லை
யார் கவலைக் கொள்வார்? நான் கவலைப்பட்டேனா?
நான் இழுத்த இழுப்பிற்கு என் நிழலைப்போல ஓடிவருகிறாள்
அவள் குரலை நான் கடைசியாக எப்போது கேட்டேன்
நினைவில் கூட இல்லை.
அவள் மணிக்கட்டு சிவந்து கிடக்கிறது
வலி பொறுக்காமல் அவள் நடையின் வேகம் மட்டுப்பட்டுக் கொண்டே வருகிறது
நான் பொருட்படுத்தினேனா?
என் குறியின் பசிக்கு
நான் தீனி போட்டாக வேண்டும்.
என் குறியின் பசிக்கு நான் விதைத்தாக வேண்டும்
விதைத்ததை அறுவடை செய்தாக வேண்டும்
விதைப்பதற்கும் அறுவடை செய்வதற்கும் நிலம்?
வீடற்று வீதியில் ஒதுங்கி
நடைமேடையில் கூட்டத்தோடு ஒண்டி வாழ்பவனுக்கு
விதைப்பதற்கும் அறுவடை செய்துக் கொள்வதற்கும்
காலமும் நிலமும் ஏது?
வீதிகளெங்கும் திரிகிறேன்
தூரத்தில் ஒரு ஆண் நாய்
பெட்டை நாயின் புட்டத்தை மோப்பம் பிடித்தபடி நகர்கிறது
பெட்டை நாய் இசைந்து கொடுக்கிறது
என் நிழலை, நான் திரும்பிப் பார்க்கிறேன்
நிழலின் மேல் அவளே தெரிகிறாள்
மணிக்கட்டில் வலி அவளுக்கு, பசிவேறு
வயிற்றுப்பசி தான், என் பசியல்ல
அவள் என் புட்டத்தை மோப்பம் பிடிக்கவில்லை
இசைவுத் தெரிவிப்பாள் என்று கூட எனக்கு தோன்றவில்லை
இருந்தும் நான் இடம் தேடித் திரிகிறேன்
அவளைப் புணர்வதற்கு
No comments:
Post a Comment