Saturday, 19 October 2019

05

பெரியாரை வாசிப்போம் – 05

இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும் இனிமேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்று, சாந்தியாய், திருப்தியாய் நல்வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனி சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம்.

எப்படி எனில், மக்கள் இனி சுலபத்தில் சாகமாட்டார்கள். இதுவரை நம் மக்களுக்கு சராசரி ஆயுள் 25 என்றால், இனி மக்கள் சராசரி ஆயுள் வயது 50க்கும் மேற்பட்டுத்தான் இருக்க முடியும். சுகாதாரம் அதிகம்; வைத்திய வசதி அதிகம். மனிதன் நோய்களையும், துன்பங்களையும் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அற்பாயுளாகப் போய்க் கொண்டு இருந்தவன், தன் முயற்சியில் நம்பிக்கை வைத்துப் பரிகாரம் தேடி மீளுகிறான். மனிதனுக்குப் பல துறைகளில் அறிவு உணர்ச்சி ஏற்பட்டு, வாழ்வை நீட்டிக் கொள்ள வசதி பெற்றுவிட்டான்.

இது போலவே, மக்கள் பிறப்பும் அதிகமாகிவிட்டது. கர்ப்பச் சிதைவு, சிசு மரணம், பிரசவ மரணம் இனி சுலபத்தில் ஏற்படாத மாதிரி பாதுகாப்புகள், பரிகாரங்கள் ஏற்பட்டு விட்டன. இனி மலடும் இருப்பதற்கு இல்லாமல் நிவர்த்தி மார்க்கங்கள் ஏற்பட்டு விட்டன. இனி விதவைகளாகவும் எவரும் காலம் கழிக்க முடியாமல் விதவை மணம், சுதந்திர காதல் முதலியன செலவாக்குப் பெற்று, சாதாரணமாய் நடப்பில் வருவதின் மூலம் அவற்றாலும் பிறப்பு அதிகமாகின்றது.

பொதுவாக, பிறப்பு விகிதங்களும் பலவகை சவுகரியங்களால் நபர் 1–க்கு 2,3,4 என்பதாகக் குழந்தைகள் இருந்து வந்தது மாறி, இப்பொழுது நபர் 6,8,10,12 என்பதாகக் குழந்தைகள் பிறப்பதும், அவைகளும் நீண்ட நாள் வாழ்வதுமாக இருக்கின்றன. இவர்களுக்கு எல்லாம் உணவு, போக போக்கியப் பொருள், பிழைப்பு, நல்வாழ்வு ஆகியவை தேவைப்படுவதுடன் உணவுப் பஞ்சம் ஏற்பட்டே தீரும். இவைகளில் பெரும் போட்டியும் அதன் பயனாய் வெறுப்பு, வஞ்சகம், துரோகம், கொள்ளை, கொலை முதலியவைகள் மலிந்துவிடும். சாதுவும் யோக்கியமுமான மக்கள் மிகமிகத் துன்பமடைய நேரிடும். அயோக்கியர்களும் காலிகளுமே நல்வாழ்வு வாழ்வார்கள். அதற்கேற்ற அரசாங்கந்தான் ஏற்பட முடியும்.

('குடி அரசு' கட்டுரை-7.5.1949)

#periyaraivasipom #periyaraivaasipom
#பெரியாரைவாசிப்போம்
#பெரியார்141 #periyar141

No comments:

Post a Comment

The lunch box

என் அம்மா எப்போதும் சொல்வார் “ சில நேரங்களில், ஒரு தவறான ரயிலால் கூட உங்களைச் சரியான  ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்” என்று ...