பெரியாரை வாசிப்போம் - 04
‘கல்' என்பதற்கு 'அறி' என்பது பொருள். கல்வி என்றால் அறிவி , தெரிவி என்பது தான் பொருளாயிருக்க வேண்டும் . எனவே எதை அறிவிப்பது என்று கவனித்தால் உலக சுபாவத்தையம் , மனிதத் தன்மையையும் அறிவிப்பதே கல்வியாகும் . மற்றவைகள் வித்தையாகும் .
இதற்கு உதாரணமாக .
' ஒத்ததறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் . ' உலகத்தோடொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் '
என்ற வள்ளுவர் வாக்கே போதுமானது . ஆதலால் உலக நிலையையும் அதற்குத்தக்கபடி நடந்து கொள்ளத்தக்க மனிதத் தன்மையையமே மூக்கியமாய்க் கொண்டு கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் . இப்போதைய கல்வி என்பது மனிதத் தன்மைக்கும் அறிவுக்கும் சிறிதும் பொருத்தமானதல்ல .
குடிகளிடத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு பொறுப்பற்ற அரசன் தனது பிரஜைகளை மூடர்களும் , தேசத்துரோகிகளுமாக ஆக்கி தனது காலடியிலேயே அமுக்கி வைத்துக்கொண்டு நிரந்தரமாய் தன்னிச்சைப்படி ஆட்சி புரிய வேண்டும் என்று கருதுகின்ற ஒரு அரசாங்கத்திற்கு அனுகூலமான கல்வியாகவே இருந்து வருகின்றது . அது மாத்திரமல்லாமல் ஊரார் உழைப்பில் நோகாமல் வயிறு வளர்க்கக் கருதுவதும் அயோக்கியர்களின் ஆதிக்கத்திற்கு அனுகூலமான கல்வியே அளிக்கப்பட்டு வருகின்றது . எனவே, இவை அடியோடு மாற்றப்பட வேண்டும் .
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் பக்தி , மத பக்தி , இராஜ பக்தியாகிய அறிவுத்தடையும், அடிமை புத்தியும் கற்பிக்கக்கூடிய விஷயங்கள் கல்வுச் சாலைகளுக்குள் தலைகாட்டவே விடக் கூடாது. ஏனெனில், கடவுளிடத்திலும், மதத்தினிடத்திலும், அரசனிடத்திலும் பக்தியாய் இருக்கும்படி அவ்வவைகளே செய்துகொள்ள வேண்டுமே ஒழிய, இதற்காக ஒரு பள்ளிக் கூடம் வைத்து மக்களுக்குச் சொல்லி கொடுக்க வேண்டுமென்பது அயோக்கியத்தனத்தின் முதல் பாகமாகும். கல்வி கற்பிக்கும் வேலை இதுசமயம் முக்கியமாய் பெண்களுக்கும், தீண்டாதாராக ஆக்கப்படவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்குமே செய்ய வேண்டும்.
(தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டுத் தலைமையுரை – 26.11.1928)
#periyaraivasipom #periyaraivaasipom
#பெரியாரைவாசிப்போம்
#பெரியார்141 #periyar141
No comments:
Post a Comment