தினம் நான் செல்லுகிற சாலையின் இடதுபறத்தில் ஒரு பெரியார் சிலை இருக்கும் அதை ஒட்டி ஒரு பேருந்துநிறுத்தமும் இருக்கும். பள்ளி செல்லும் மாணவ மாணவியர், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் என காலையில் அந்த பேருந்து நிறுத்தம் நிரம்பி வழியும். தினம் அந்த பேருந்து நிறுத்தத்தையும், பெரியார் சிலையையும் கடந்துதான் நான் வேலைக்கு செல்ல வேண்டும். அப்படி நான் ஒருநாள் செல்கிறபோது அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் என்னை இடைமறித்தான். நான் அந்த சாலையின் ஓரமாக நிறுத்தினேன்.
“அண்ணா உக்கடத்துல ட்ராப் பண்ண முடியுமா” என்று கேட்டான். சரி என்று தலையசைத்து அந்த சிறுவனை ஏற்றிக்கொண்டு கிளம்பினேன். போகிறபோக்கில் பேச்சு கொடுத்து அவனை பற்றி மேலோட்டமாக அறிந்துகொண்டு நிதானமாககேட்டேன்.
“ அந்த பஸ் ஸ்டாப் பக்கத்துல ஒரு சிலை இருந்துச்சுல அது யாரு சிலை”
சட்டென்று பதில் வந்தது “அதுவா அது பெரியார் சிலை”
“அவரு அப்படி என்ன செஞ்சாரு,அவருக்கு சிலை வச்சிருக்காங்க”
பெரியார் யார் என்று அறியாதவர் யாரிடமாவது கேட்டால் என்ன பதில் வருமோ அதே பதில் அந்த சிறுவனிடமிருந்தும் வந்தது.
“ அவரா அவருதான் கடவுள் இல்லைன்னாரு”
“கடவுள் இல்லைன்னு சொன்னதுக்கா சிலை வச்சிருக்காங்க”
“ஆமான்னா…….” உறுதியாகசொன்னான். நான் சிரித்தேன்.
“அதுக்காக அவருக்கு சிலை வெக்கல, நீ தெரிஞ்சுகிட்ட அந்த பெரியார், பெரியார் இல்ல. பெரியார உனக்கு யாரும் காட்டமாட்டாங்க” என்றேன்.
”ஏன்?” படாரென்று கேட்டான்.
நான் சிறிதும் யோசிக்காமல் சொன்னேன்
“ காட்டிட்டா நாமலாம் கேள்வி கேட்டிருவோம்ல, நமக்கெல்லாம் சுயமரியாத வந்துட்டா அவனுங்க பொளப்பு நடத்த முடியாதுல அதனாலதான்” என்று சொன்னேன்.
அந்த சிறுவனிடமிருந்து எந்த பதில் கேள்வியும் இல்லை. நான் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். சில நிமிடம் இருவரிடமும் நிசப்தம் அதன் பின்னால் தயங்கி தயங்கி கேட்டான்.
“ யாரு பெரியார்?”
இந்த கேள்வியில் தேடலின் தொனி தெரிந்தது. சொல்ல நினைத்தேன் ஒற்றை சந்திப்பில் சொல்லிவிட முடியாத வாழ்கையை அவர் வாழ்ந்திருக்கிறார், செய்ய முடியாத சமூக போராட்டத்தை அவர் செய்து சென்றிருக்கிறார், இன்னும் செய்து கொண்டிருக்கிறார். அந்த சிறுவனிடம் யார் பெரியார் என்று நான் முழுதாக சொல்லவில்லை, சொல்வது சாத்தியமும்மில்லை. நான் சொல்ல நினைத்ததை எழுதுகிறேன், ஆனால் ஒற்றை கட்டுரையில் அது சாத்தியமில்லை. ஆகையால் தொடர்ந்து எழுதுகிறேன். இனைந்திருங்கள் இனைந்து தேடுவோம் பெரியாரை. அதுவே நிகழ் காலத்தின் தேவையும் கூட.
யார் பெரியார்?
- தேடல் தொடரும்.....
காத்திருக்கிறேன் அண்ணே.. தொடருக்காக
ReplyDelete